திங்கள், 12 ஜூன், 2017

மார்க்சியப் பார்வையில் ‘தோழர்’ புதினம்

மார்க்சியப் பார்வையில் ‘தோழர்’ புதினம்
முனைவர் சு.தங்கமாரி,
உதவிப்பேராசிரியர்,முதுகலைத்தமிழ்,
வி.இ.நா.செ.நா.கல்லூரி(தன்னாட்சி),
விருதுநகர்.
தோற்றுவாய் :
இன்றைய காலக்கட்டத்தில் உலகம் முழுமையும் ஒரு சிந்தனை தேவை ஏற்பட்டுள்ளது.ஏனெனில் நாடு,மொழி,இனம்,பிராந்தியம் தாண்டி அங்கிங்கெனாதபடிக் காற்றுப்புகாத இடங்களிலும் கூட முதலாளித்துவத் தாக்கமும்,தாக்கத்தினால் உண்டான முரண்பட்ட வாழ்வியல் கூறுகளும் தோன்றியுள்ளன.ஆனால் முதலாளித்துவச் சிந்தனை எவ்வகையில் தன்னுடைய ஆழ்ந்த விதையைத் தூவினாலும்,அதனை முறிக்க அதனுள் இருந்து முற்றிலும் மாறுபட்ட பொதுவுடைமை சிந்தனையும் தொடர்ந்து தன் போராட்ட நிலையினைச் செயல்படுத்திக் கொண்டே இருக்கின்றது.
அவ்வகையில் உலகம் முழுமையும் பொதுவுடைமைச் சிந்தனை உடைய காம்ரேட்டுகள் இலக்கியப் பணியிலும் தன் வீச்சினைச் செலுத்த தவறுவதில்லை.இதே போன்றதொரு பணியினைச் செய்வதாகத் தோற்றம் பெற்றுள்ள படைப்பாளர் தனுஷ்கோடி இராமசாமியின் ‘தோழர்’ புதினத்தை மார்க்சியப் பார்வையில் காணும் முகமாக இக்கட்டுரை அமையப் பெற்றுள்ளது.
மார்க்சியப் பார்வையே மானுடம் :
உலகினை நாடு,மொழி,இனம் எனப் பிரித்துக் காட்டி,அதன்வழி சில புல்லுருவிகள் தன் சுயநலமிக்க செயல்களைச் செய்து வருகின்றனர்.இப்பிரிவினையைக் கொண்டு ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு தோற்றுவிப்பது மட்டுமின்றி மானுடம் முழுமைக்கும் கிடைக்க வேண்டிய இன்பத்தை, ஒரு சாரார் மட்டும் சுரண்டுவதற்கு வழிவகையும் செய்கின்றனர்.இதனால் மிகக் கொடிய வாழ்வியல் சூழல் உலகம் முழுதும் இருந்து வருகின்றது.ஆனால் மார்க்சியப் பார்வையில் சாதி,மதம்,மொழி,இனம் நாடு கடந்து மானுடம் உய்விக்கத் தேவையான அத்தனைச் செல்வங்களையும் பொதுவுடைமை ஆக்குவதே நோக்கமாக உள்ளது.உலகில் இன்று மார்க்சியத் தேவை அதிகரித்துள்ளது.அதை மக்களிடையே இட்டு நிரப்ப வேண்டியப் பணியினைச் சில படைபாளர்கள் செய்து வருகின்றனர்.
தோழர் சொல்லாடலும் உணர்வுகளும் :
தமிழ் இலக்கியத்தில் நட்பு,தோழன் என்ற சொற்கள் ஒரு ஆழம் மிக்கப் பொருளினை இலக்கியப் பொருண்மையில் தந்து கொண்டே இருக்கிறது.நட்பின் சிறப்புக் குறித்து வள்ளுவரும்,
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
இடுக்கண் களைவதாம் நட்பு”
என்று குறிப்பிடுகிறார்.இதே போன்று கம்பராமாயணத்தில் குகன் - இராமன் நட்பும் சிறப்புடையதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இப்படிச் சிறப்பிடம் பெற்று விளங்கும் நட்பு குறித்த இலக்கியச் சித்திரிப்புகள் ஒரு அரசியல் இயக்கத்தில் ‘தோழமை’ என்ற சொல்லாடலாகப் பயன்படுத்தும் பொழுது அதற்கான ஒரு கருத்தாக்கப் பொருண்மை கிடைக்கப் பெறுகின்றது.இவ்வாறு கருத்தாக்கப் பொருண்மை பெற்ற இச்சொல்லாடல் ஒரு மிகப் பெரிய பொதுவுடைமை சித்தாந்த செயல்பாட்டில் மிகப் பெரிய பங்கினைப் பெறுகின்றது.அதாவது, ‘தோழர்’ என்ற சொல்லாடல் தரும் உணர்வு என்பது முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டக் களத்தில் செயல்படும் ஒரு எழுச்சி என்பதைக் குறிக்கின்றதி.
அந்த வகையியிலே ஆசிரியர் தனுஷ்கோடி இராமசாமியினுடைய படைப்பான ‘தோழர்’ புதினமும் மார்க்சிய கருத்தாக்கங்களைத் தாங்கிச் செல்லும் களமாகும் என்பதை உணர முடிகின்றது.
பிரான்சு - தொழிற்புரட்சி - காட்சிச் சித்திரிப்பு :
‘தோழர்’ புதினத்தின் கருத்தியல் சார்ந்த மைய உரையாடல் அனைத்தும் ‘பழனிமுருகன்’ என்ற மார்க்சிய சிந்தனை கொண்ட இளைஞனுக்கும் பிரான்சு தேசத்தில் இருந்து தொண்டு நோக்கில் வந்துள்ள சிலருக்கும் இடையே நடைபெறுவதாக இருக்கின்றது.உலகிற்கு உண்மைப் போராட்டத்தின் வழியாக உழைக்கும் வர்க்கத்திற்கான உரிமைகளை மீட்டெடுத்த ‘தொழிற்புரட்சி’யினைக் கொடையாக வழங்கிய பிரான்சு தேசத்தவர்களுக்கு உழைக்கும் மக்களின் உணர்வுகளைப் புரிய வைக்கும் ஒரு போராளியாகத் தலைமைப் பாத்திரம் சித்திரிக்கப்படுவது வியப்பினை அளிப்பதாக உள்ளது.
அதேவேளையில் பிரான்சு தேசத்துக் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் உரையாடல்கள் அனைத்தும் தலைமைப் பாத்திரத்தின் செயல்பாடுகளைப் படைப்பாளர் வாசகனுக்கு மெழுகேற்றிக் காட்டப் பயன்படுத்தும் உத்தி முறைகளாகவே கொள்ள முடிகின்றது.ஏனெனில் கிறித்தவப் பிரசங்கங்களின் வழியாக மட்டுமின்றி கிராம மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பொருளாதார வினையூக்கியாகச் செயல்பட முனைகின்றனர்.
அதன்வழி பிரான்சு தேசத்தவர் சேவை எனும் மத பிரசங்க செயல்பாடு என்பது வர்க்கப் பிரிவினை மூலம் ஏற்பட்ட ஆழ்புண்ணிற்காக மேற்பரப்பில் தடவப்படும் மருந்து போன்றதே ஆகும்.ஆனால் தலைமைப் பாத்திரம் கூற்றாக,
“நாங்கள் எங்கள் மக்களுக்குப் பிச்சையிடுவதையோ சில சீர்திருத்தங்கள் செய்வதையோ விரும்பவில்லை.முழுக்க இந்தச் சமுதாயத்தின் அடிப்படை அமைப்பையே மாற்றி உழைக்கும் மக்களைச் சுரண்டாத சுதந்திரமான ஓர் இனிய உலகை அமைக்கத் திட்டமிடுகிறேன்”ப-28
வருகின்றது. இக்காட்சிச் சித்திரிப்புச் செய்துள்ளதைக் கொண்டு இப்புரையோடிய புண்ணைக் குணப்படுத்துவதற்கு அடிப்படையினையே மாற்ற வேண்டும் என்ற படைப்பாளருடைய உள்ளம் வெளிப்படுவதை உணர முடியும்.

தோல் - நிறம் - உளவியல் சித்திரிப்பு : 
 ‘மாதவனும் வடிவேலும்’ நடித்த தமிழ்த் திரைப்படத்தில் ‘நிறம்’ குறித்த காட்சிச் சித்திரிப்பு ஒன்று வரும்.அதாவது மாதவனுடைய சிவந்த மேனியைக் காட்டி “அடேய்! சிவப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் டா” என்று உரையாடல் அமையப் பெற்றிருக்கும். இயல்பாகவே,இரு நூற்றாண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த வெள்ளையர்கள் மீதான மேன்மைப் பார்வையானது இன்றும் நம்மில் இருந்து மறையவில்லை என்பதை இப்புதினம் மிக சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றது. 
கலிங்கமேட்டுப்பட்டியில் பழனிமுருகனும் குமரி ஷபின்னாவும் செல்லும் பொழுது நிகழக் கூடிய காட்சிகள் அனைத்தும் கிராம மக்களுடைய அறியாமையையும், நிறம் குறித்த தனது அடிமைச் சிந்தனையையும் சித்திரிப்பதாகவே உள்ளன.சான்றாக,ஷபின்னாவைப் பார்ப்பதற்காகக் கூடும் கூட்டம் அவர்கள் பேசுகின்ற பேச்சுகள் சிலவற்றைக் கொண்டு இதனை உணரலாம்.
“எங்கள் கஷ்டங்களெல்லாம் நீங்குறதுக்கு நீங்க ஏதாவது வழி பண்ணுங்க சாமி”ப-34
“சாமி நீங்களே திரும்பி வந்து இந்த தேசத்த ஆளுங்க...சாமி....கொடுமைக்காரப் பாவிக ஆட்சியிலே..........ஜனங்க தவியாத் தவிக்குதுக.......நீதியே கிடையாது.....நீங்களே திரும்ப வந்து ஆளுங்க சாமி.....ஒங்களுக்கும் புண்ணியம் உண்டு.எங்க ஜனங்களுக்கும் வயிறாரக் கஞ்சிக் குடிக்க செவனேன்னு காலங் கழிக்குங்க.”ப-36
“வெள்ளைக்கார நாட்லேருந்து கடலைத் தாண்டிவந்து எங்களுக்கு ஆஸ்பத்திரி கட்டிக் கொடுக்க வந்திருக்குற தர்ம புண்ணியவான்மார்கள்லா......என்று கைக்கூப்பியபடி சொன்னார்கள்”ப-132
அதேவேளையில் விடுதலை அடையும் முன்பு கிராமச் சூழலில் பயன்படுத்தப்பட்ட குழந்தை பாடல்களில் வெள்ளைக்காரர்கள் பற்றியான நாட்டுப்புறப் பாடல்களைக் குழந்தைகள் இன்றளவும் பாடுவதும் பதிவு செய்யப் பெற்றுள்ளது.
“வாராண்டா..... வாராண்டா.....வெள்ளைக்காரன்
 வரட்டுந் தாயோளி வெள்ளைக்காரன்”ப-148
காட்சியமைப்பிலும் அதனை விவரிக்கும் தன்மையிலும் படைப்பாளன் தன்னையறியாமல் தன் ஆழ்மனதில் ஊடாடுகின்ற உணர்வுகளை வெளிப்படுத்திடுவதும் உண்டு. ஆகவே இப்புதினப் படைப்பாளரும் தன்னை அறியாமல் இந்த நிற மோகத்தில் ஆட்பட்டுள்ளதை ஒரு சில காட்சிகளின் வாயிலாக உணர முடிகின்றது. 
“அதற்காக பெண் என்று கூடக் கண்டுகொள்ள முடியாத பெண்ணாகவா இருக்கிறேன்......என்று கேட்டுச் சிரித்தாள்.அவளது வெண்மை நிறமான முகம் வெட்கத்தால் கசங்கி சிவப்பு ஏறிக் கனிந்து விட்டது.
கழுத்திற்குக் கீழ் அவளை அவன் பார்க்க.....அவன் பார்ப்பதை அவளும் கவனித்து அவர்கள் இருவர் மட்டும் அர்த்தத்தோடு சிரித்துக் கொண்டனர்.”ப-43
 “எல்லோருக்கும் களைப்பு மேலிட்டது.கொஞ்சம் தாமதித்து நின்றார்கள்.எல்லோரும் தொப்பு தொப்பாக நனைந்திருந்தார்கள்.ப்ரஜீத்து போட்டிருந்த வெள்ளை உடை முழுவதும் நனைந்து உடலோடு ஒட்டிப்போயிருந்தது.உள்பாடி அணியாதிருந்ததால் அவளது மார்பகங்கள் வளமாக மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் உருண்டு திரண்டு சரிந்து முன் தள்ளிக் கொண்டிருந்தது.
பழனி கூர்ந்து அவளைக் கவனிப்பதைப் பார்த்த எல்லோரும் ஓ...... எனக் கூச்சலிட்டுச் சிரித்தனர்”ப-156
இந்த உரையாடல் வாயிலாக முதன்மைப்பாத்திரத்தின் தனித்துவத்தில் சில இந்தியப் பாலியல் சார்ந்த முரண்பாடுகள் சித்திரித்துக் காட்டப்படுவதும் அச்சித்திரிப்பிற்குள் படைப்பாளரும் அடங்குவதும் புலனாகும்.இம்முரண்பாடுகள் நிரம்ப இடங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன.பிரான்சு தேசத்தவரின் பாலியல் உறவுகளைக் கேட்கும் பொழுது வெளிப்படுகின்றது.
மார்க்சியக் கருத்தாடல்கள்  : 
  புதினத்தில் பெரும்பான்மையான உரையாடல்கள் மார்க்சியக் கருத்தாடல்களைத் தாங்கியதாகவே அமையப் பெற்றுள்ளன.

 பழனிமுருகன்(அடிப்படை மார்க்சியம் கற்பவன்)




   ஷபின்னா                 ங்கொஷெஸ்குவா 
(முதலாளித்துவப் பின்னணி கொண்ட சமூக சேவகி)    (ஆழ்ந்து பட்ட மார்க்சியவாதி)

மார்க்சியக் கருத்தாடல்கள் இம்மூவரைக் கொண்டே இப்புதினத்தில் அமையப் பெற்று வந்துள்ளன. ‘பழனி முருகன்’ தலைமைப் பாத்திரமாக அமையப் பெற்றிருப்பினும் ஒரு தேர்ந்த மார்க்சியவாதியாகக் களம் நின்று பிரச்னையைக் கையாளக் கற்றுக் கொடுக்கும் ஒரு ஆசானாக ‘ஷ்ஸ்குவா கொஷெ’ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது சிறப்பாகும். அதாவது உள்ளூர் பிரச்னை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு தன்னைச் சிறந்த மார்க்சியவாதியாகக் காட்டிக் கொள்ள விரும்பும் ‘பழனிமுருகன்’ இடையே,உலக நடப்பியலையும் சர்வதேச சிக்கலையும் தன் விரல் நுனியில்  பேசும் ‘ஷ்ஸ்குவா கொஷெ’ சிறப்பான பாத்திரப் படைப்பு ஆகும்.
“அவர்களோடு இரவு பகலாகப் பழகி,உண்டு,உறங்கி,குளித்து வேலை செய்யும் பொழுது தற்செயலாக இந்த கட்சிக் கார்டைப் பார்த்துவிட்டால் கூட இவருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமே.......என்று பழனிக்கு வியப்புத் தாளவில்லை.
என்ன தோழரே.....இவ்வளவு வியப்படைகிறீர்கள்.....உலகம் முழுமைக்கும் விடுதலை கிடைக்கும் வரை நாம் தந்திரங்களையும் தலைமறைவு வாழ்க்கையும் மேற்கொள்ளத் தானே வேண்டும்”ப-238
“பேச்சின் போக்கில் பழனியைப் பற்றிய அவருடைய கருத்தைக் கூறினார்.பழநி கட்சிக்கு வந்து ஓரிரு ஆண்டுகள் தானிருக்க வேண்டும்.வெளியில் நான்கு ஐந்து ஆண்டுகள் அனுதாபியாக இருந்திருக்கலாம் என்றார்.”ப-239
மேற்கண்ட இந்த உரையாடல்கள் ‘ஷ்ஸ்குவா கொஷெ’வினுடைய கருத்தாழமிக்க மார்க்சியக் கருத்தாடல்களைப் புதினத்தின் மேற்தளத்தில் வைக்காமல் நுட்பமாகப் புதினத்தை வாசிக்கும் வாசகனுக்கு விருந்தாக்கும் நோக்கில் படைப்பாளர் வைத்துள்ளமைச் சிறப்பிற்குரியதாகும். 
இதேபோன்று ‘ஷபின்னா’ என்ற மேற்தட்டு வர்க்கத்தின் கண்மூடித்தனமான சமூகப் பார்வையினைச் சீர்படுத்தும் முகமாக அமையப் பெற்ற உரையாடல் முழுமையும் மார்க்சியக் கருத்தாடல்களைக் கொண்டவையாகும்.
“நான் கம்யூனிஸ்ட்டுகளைக் கடுமையாக வெறுக்கிறேன்.ஏவு,இரக்கமற்றவர்கள்,கொலை கொள்ளைகளுக்கு அஞ்சாதவர்கள்.அழகுணர்சி அற்றவர்கள்.கலாட்டா பேர்வழிகள்......உலகின் அமைதியைக் கெருப்பவர்கள்.....என்று ஆத்திரத்தோடு கூச்சலிட்டாள்”ப-49
இப்படிக் காம்ரேட்டுகளை முதலில் வெறுக்கும் ‘ஷபின்னா’ இப்புதினத்தின் இறுதியில் உதிக்கும் ஒரே வார்த்தை எதுவெனின், 
“கா......ம்.........ரே.......ட்.............”ப-298
என்பதாகும். அந்தளவிற்கு மார்க்சிய உரையாடல்களும்,அதன்வழி நின்ற போராட்டங்களும் மார்க்சியவாதிகளின் மீதான தவறான பார்வையினை மாற்றியவைகளாகக் காட்சியமைக்கப்பட்டு உள்ளது சிறப்புடையதாகும்.
புதினத்தில் மார்க்சியச் சிந்தனைப் பதிவுகள் : 
  புதினத்தில் மார்க்சியச் சிந்தனைப் பதிவுகள் மட்டுமின்றி இந்திய அளவிலான மிகப் பெரிய சிக்கலான சாதியச் சிக்கலும்,சாதியம் மீதான மேலைநாட்டாரின் பார்வையையும்,மொழி குறித்தப் பார்வையும் மிகச் சரியாகப் பதிவு செய்யப் பட்டுள்ளமை சிறப்பாகும்.
சாதியச் சிந்தனை : ‘ஹரிஜன்’ என்ற சொல்லாடல் மீதான மீள்பார்வை
“ஹரிஜனங்கள் கடவுளின் குழந்தைகள் என்றால் மற்ற்வர்கள் எல்லாம் கடவுளின் குழந்தைகள் இலாது மரக் கட்டைகளின் குழந்தைகளா?மற்றவர்கள் எல்லாம் மனிதர்களின் குழந்தைகள்,ஹரிஜனங்கள் மட்டும் கடவுளின் குழந்தைகள் என்று குறிப்பிடுவதாலேயே ஹரிஜனங்கள் மற்றவர்களிலிருந்து வேறுபட்டவர்கள் என்று ஆகிவிடுகிறது இல்லையா?........”ப-140
மொழிச் சிந்தனை : ‘ஒரு மொழி’ என்ற குறுகியப் பார்வை எதிர்ப்பு
“ஹோ...... என்ன கொடுமை...... எவ்வளவு பைத்தியக்காரத்தனமானது........ வறுமை,அறியாமை,அழுக்கு,நோய்கள்,அடிமைத்தளங்கள் நிறந்த இந்த நாட்டிலே அவற்றைப் போக்க முயற்சிக்காது மொழியைப் பிராதப்படுத்தி அரசியலா?....என்னால் நம்பவே முடியவில்லையே...?”ப-234
இறுதிவாய் : 
புதினத்தின் ஒவ்வொரு பக்கங்களும் சாலச் சிறந்த கருத்துக்களைச் சொல்லிச் செல்கிறது.
மார்க்சியம் குறித்தான நல்ல புரிதலை வாசகனுக்குத் தருகின்றது.
மொழி,இனம் தாண்டிய மனிதத்திற்கான விடிவு மார்க்சியத்திலே தான் உள்ளது என்பதை இப்புதினம் எடுத்துரைக்கின்றது.
பாலியல் சிக்கல் இன்றளவும் இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்து வருவதைக் கட்டுகின்றது.
‘தோழர்’ என்ற சொல்லாடல் தரும் வலிமை மிகுந்த போராட்டக் குணத்தினை உணர முடிகின்றது.
இவை தாண்டிப் புதினத்திற்கான நடை மிகச் சிறப்பாக உள்ளமையை உணர முடிகின்றது.

Tamil International Seminar 2017







சிறிது வெளிச்சம் - கு.ப.ரா

சிறிது வெளிச்சம் - கு.ப.ரா

அப்பா அவன் துன்பம் தீர்ந்தது என்று ஒருசமயம் தோன்றுகிறது.

ஐயோ தெரிந்தே அவளை சாவுக்கிரையாக விட்டு விட்டு வந்தேனே என்று ஒருசமயம் நெஞ்சம் துடிக்கிறது. 

நான் என்ன செய்ய முடிந்தது. அவள் இடமே கொடுக்கவில்லையே 

அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு எவ்வளவோ தடவைகள் அங்கே போயும் அவளைப் பார்க்க முடியவில்லை. 

நேற்று போனேன் அவள் மாரடைப்பால் இறந்துபோய் விட்டாளாம்! 

மாரடைப்பா 

அந்த மார்பில் இன்னும் என்னென்ன ரகசியங்கள் மூண்டு அதை
அடைத்து விட்டனவோ? 

அன்றிரவு சிலவற்றைத்தான் வெளியேற்றினாள் போல் இருக்கிறது. 
போதும், சிறிது வெளிச்சம் போதும்; இனிமேல் திறந்து சொல்ல முடியாது' என்றாள் கடைசியாக. 

திறந்து சொன்னதே என் உள்ளத்தில் விழுந்துவிடாத வேதனையாகி விட்டது. 

தொகை நூல்களில் சுட்டப்படும் ‘உறவு நிலைகள்’

தொகை நூல்களில் சுட்டப்படும் ‘உறவு நிலைகள்’
முனைவர் இர.சீலாராணி,
உதவிப்பேராசிரியர்,
அரசு கலைக் கல்லூரி,
மேலூர்.

முன்னுரை
தொகை நூல்களில் தமிழர்களின் உறவானது மிகவும் போற்றத்தக்கதாகவே விளங்கியுள்ளது. அதனை நாம் இலக்கியங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் தொகை நூல்களில் உறவு நிலைகள் எந்ததெந்த அடிப்படையில் சுட்டப்பட்டுள்ளது என்பதைக் குறித்து ஆய்வதே இக் கட்டுரையின் சிறப்பாகும்.
தலைவன் தலைவியின் காதல் மற்றும் இல்வாழ்க்கை உறவு
தமிழர்கள் காதலுக்கு அளித்த சிறப்பினைத் தொகை நூல்களில் சுட்டப்படும் செய்யுட்களின் வாயிலாக நாம் அறியலாம். அவ்வகையில் வயது வந்த ஆணும் பெண்ணும் கொடுப்பாரும் அடுப்பாருமின்றித் தெய்வத்தின் அருளால் எதிர்ப்பட்டு உள்ளம் கலத்தலைக் களவென்றனர். அவ்வாறு உள்ளம் ஒன்றியக் காதலர் தம் பெற்றோருக்குத் தெரிவித்து மணந்து கொண்டு வாழ்வதனைக் கற்பு வாழ்வு என்றனர்.
“யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முகை; கேளிர்
நீயும் யானும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே” (குறுந்தொகை பா.எ.40)
காதலுலகத்தில் இருவர் என்ற நிலையில்லை. இருதலைப் புள்ளில் ஓருயிர் போலவும், நீரொடு நீர் கலந்தாற் போலவும், ஈருடலும் ஓருயிருமாய் ஆவதே உண்மைக் காதலென்றனர். தமிழர் எங்கெங்கோ பிறந்த ஆணும் பெண்ணும் உள்ளமொன்றி உறவுநிலை கொண்டமையை ஆசிரியர் இதில் விளக்கியுள்ளார்.

தி.ஜானகிராமனின் ‘முள்முடி’ சிறுகதை உணர்த்தும் ஆசிரியர் – மாணவர் உறவு

தி.ஜானகிராமனின் ‘முள்முடி’ சிறுகதை உணர்த்தும் ஆசிரியர் – மாணவர் உறவு
முனைவர் ஜெ.மணிச்செல்வம்,
உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,
வி.இ.நா.செ.நா.கல்லூரி(தன்னாட்சி),விருதுநகர்.
முன்னுரை
தி.ஜானகிராமன், தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள தேவங்குடியில்  பிறந்தவர். தாம் பிறந்த சீமையின் சூழ்நிலையையும் நடையுடை பாவனைகளையும், பேச்சுவழக்குகளையும் இயல்பாகச் சித்திரித்து பல புதினங்களையும், சிறுகதைகளையும், நாடகங்களையும் எழுதியுள்ளார். சில மொழிப்பெயர்ப்பு நூல்களையும், சில விஞ்ஞான நூல்களையும் வெளியிட்டுள்ள இவர் 11 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். 1954 முதல் அகில இந்திய வானொலியிலும், தொலைக்காட்சியிலும் பணியாற்றி ஓய்வு பெற்றார். புதிய தலைமுறை எழுத்தாளர்களையும் உற்சாகப்படுத்தும் இயல்புடையவர். இவரது ‘சக்தி வைத்தியம்’ என்ற நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளது. இவரது அம்மா வந்தாள், மரப்பசு ஆங்கிலத்திலும், மோகமுள்,அம்மா வந்தாள், மலையாளம் மற்றும் குஜராத்தியிலும்; மொழிபெயர்க்கப் பெற்று நூல்களாக வெளிவந்துள்ளன.

கு.சின்னப்பப்பாரதியின் புதினம் வெளிப்படுத்தும் உறவுகள்

கு.சின்னப்பப்பாரதியின் புதினம் வெளிப்படுத்தும் உறவுகள்
முனைவர் இ.செல்வி,
உதவிப்பேராசிரியர்-தமிழ்த்துறை,
வி.இ.நா.செந்திக்குமாரநாடார்கல்லூரி (தன்னாட்சி),
விருதுநகர்.
முன்னுரை
ஆசிரியர் கு.சின்னப்பாரதி தனது புதினத்தில் ‘உறவுகள்’ என்ற நிலை சமுதாயத்தில் எவ்வாறு காணக்கிடக்கின்றது என்பதைப் பதிவு செய்துள்ளார். இப்புதினத்தில் பெண்களின் உறவு நிலை, முரண்பட்ட உறவுகள், மனிதநேயமற்ற உறவுகள், முதலாளி தொழிலாளி உறவுகள் பற்றித் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
பெண்கள் உறவுநிலை
பெண்கள் சமுதாயத்தில் ஒரு மதிப்பு மிக்கப் பயனுள்ள அங்கமாவார்கள். உலகம் பெண்களை நாட்டின் கண்களாகப் போற்றுகிறது. தமிழ் மரபுப்படி நதிகளாகவும்,கடலாகவும்.பூமியாகவும் இன்னும் பல விதமாகவும் வைத்துப் பூசிக்கின்றார்கள். கவிஞர்கள் பெண்களை ‘உலகின் ஜீவ ஆதாரம்’ என்று புகழ்ந்து பெண்ணின் நிலையை உயர்த்தியுள்ளனர்.
“உயிரைக் காக்கும் உயிரினைச் சோர்ந்திடும்
உயிரினுக்கு யிராயின்ப மாகிடும்
உயிரினு மிந்தப் பெண்மை யின்தடா”
என்பதில் உயிரைக் காட்டிலும் பெண்கள் இனிமையானவர்கள் என்கிறார் பாரதி. மேலும் பெண்கள் மென்மையை மட்டும் உள்ளடக்கியதல்ல. ஆற்றலும், சக்தியும் நிரம்பியது என்கிறார். இத்தகு சிறப்பும் மகத்துவமும் கொண்ட பெண்களுக்குச் சமூகத்தில் அவர்களின் மதிப்பு என்ன என்பதை சர்க்கரைப் புதினம் உணர்த்துகிறது.

இராமாயணத்தில் தசரதன் - கைகேயி உறவு

இராமாயணத்தில் தசரதன் - கைகேயி உறவு
முனைவர் கா.ஸ்ரீதர்,
முதுகலைத் தமிழ்த்துறைத் தலைவர்,
வி.இ.நா.செந்திக்குமார நாடார் கல்லூரி (தன்னாட்சி),
விருதுநகர்.

கம்பரால் ‘இராமகாதை’ என்று பெயரிடப்பட்ட கம்பாராமாயணம் பல்வேறு கிளைக்கதைகளையும் எண்ணற்ற உளவியல் நிகழ்வுகளையும் உட்கொண்டுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் பெரும்பாலும் அனைத்துமே தமது எண்ணப்போக்கிற்கேற்ப எதிராளி செயல்பட வேண்டும்உடன்பட வேண்டும் என்ற உளவியல் நிலைப்பாடு கொண்டவையாகவே உள்ளன. இதன் அடிப்படையில் தசரதன் மற்றும் கைகேயி ஆகியோர் தத்தமது (பெரு) விருப்பத்திற்கு எங்ஙனம் செயல்வடிவம் கொடுத்தனர் என்பது ஆய்விற்குரியதாகும். மனிதன் தன்னுடைய சுயத்திற்காக,உறவுகளை விரும்பியே இழக்கிறான் என்ற கருதுகோளைக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.
தசரதன்
தசரதன், இராமன் முதல் சத்ருகன் வரையிலான நான்கு புதல்வர்களைத் தனது செல்வமாகக் கருதியவன் ஆவான். ஆனால் இராமனை மட்டும் தனது இன்னுயிராகக் கொண்டிருந்தான். நீண்ட நெடுங்காலமாகத் தான் துய்த்த அரச வாழ்வு இன்பமயமானதாக இருப்பினும் அது,

நாட்டுப்புறக் கதைகளில் காணலாகும் குடும்ப உறவுகள்

நாட்டுப்புறக் கதைகளில் காணலாகும் குடும்ப உறவுகள்
ஜெ.காயத்ரி,
முனைவர் பட்ட ஆய்வு மாணவி,
தியாராசர் கல்லூரி,
மதுரை.
முன்னுரை
நாட்டுப்புறக் கதைகளில் குடும்ப உறுப்பினர்களிடையே நிலவும் உறவு முறைகள் குறித்து காண்பதே இதன் முக்கிய அங்கமாகும். குடும்பம் என்பது சமுதாய அமைப்பின் உயிர் நாடியாக விளங்குகிறது. குடும்பம் என்பது இரத்த உறவுகளின் வழியாகவோ, திருமணம் மூலமாகவோ தொடர்புடைய உறுப்பினர்களை உள்ளடக்கிய சமூகக்குழு என்று பொதுவாகக் கருதப்படுகின்றது.
குடும்பமும் உறவுநிலையும்
ஆணும் பெண்ணுமாக,கணவனும் மனைவியுமாக குழந்தைகளோடு இணைந்தும் உற்றார் உறவினருக்கு உதவியும் வாழ்வதே குடும்ப வாழ்வின் சிறப்பாகும். சமுதாய அமைப்பில் ஒருவனும் ஒருத்தியுமாக வாழும் குடும்ப வாழ்க்கை குறிப்பிடத்தக்க சிறப்புடையதாகும். கணவன், மனைவி என்னும் உறவினை ஏற்படுத்திக் கொண்ட பின்னரே குடும்பம் எனும் அமைப்பு நிறைவேறுகிறது.
குடும்ப உறவுகள்
உறவுகள் பல வழிகளில் ஏற்படுகின்றன. பெற்றோருக்கு மகன் அல்லது மகள் மூலமாக உறவுகள் தோன்றி பின்னர் அவர்களின் மகள் அல்லது மகன் மூலமாக மேலும் உறவு வளர்ந்து கொண்டே போகிறது. இவ்வுறவுகள் கட்டுக்கடங்காமல் வளர்ந்து கொண்டே போகும். உறவினை,

வில்லி பாரதத்தில் உறவுகள்

வில்லி பாரதத்தில் உறவுகள்
ஜெ.குணசீலி,
பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

தமிழ்த்துறை,அரசுக் கல்லூரி, ஊட்டி.


இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிரினங்களுக்கிடையேயான தொடர்பை இணைப்பை உறவு எனலாம். பெற்றோர் – பிள்ளை உறவு,சகோதர உறவு, கணவன் - மனைவி உறவு, நட்புறவு,தொழில் முறை உறவு, செல்லப்பிராணிகளுக்கிடையேயான மனித உறவு, கடவுள் மனிதன் உறவு என இணைப்புகள் இணையம் வரை நீண்டு கொண்டே செல்கின்றன. 
சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம். குடும்பங்கள் உறவுகளால் கட்டமைப்படுகின்றன. சில வேளைகளில் பெரும் சமையாக மாறினாலும் உறவுகள் தான் மனிதனின் பலமே! ஆபத்துக்களில் கைகொடுக்க, துயரங்களில் ஆறுதல் அளிக்க, இன்ப – துன்பங்களில் உரிமையோடு பங்கெடுக்க உறவுகள் வேண்டும்.

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

சங்ககால இலக்கியக் காதலும் பின்னெழுந்த பக்திக் காதலும்

சங்ககால இலக்கியக் காதலும் பின்னெழுந்த பக்திக் காதலும் - நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) - இலக்கியம்

E-mailPrintPDF
- நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) -காதல் என்னும் பதத்திற்கு அன்பு, பற்று, பாசம், நேசம், நட்பு, காம இச்சை, பக்தி, வேட்கை, ஆவல், பற்றார்வம், காதலணங்கு, அன்புச்செய்தி, காதல் நினைவூட்டு, காதல் தொடர்பு, காதலாட்டம், காதல் தெய்வம், மதவேள், அன்புகொள், பாசங்கொள், நேயமுறு, காதல்கொள், காதலி, விரும்பு, அன்புடன் பேணு, பெற்றுமகிழ், நுகர்ந்து மகிழ், ஈடுபாடுகொள், நாட்டங்கொள், சார்புகொள், விரும்பிப்பயில் போன்ற கருத்துகள் அகராதியில் நீண்டு அமைவதுபோல் காதலும் இன்ப ஒழுக்கத்தின் இயல்பை உணர்த்தி நின்று மக்களை வழிப்படுத்துகின்றது. பெண்ணானவள் 12 ஆவது, 13 ஆவது அகவைகளிலும், ஆணானவன் 14 ஆவது, 15 ஆவது அகவைகளிலும் பருவமடையும் பொழுது உடம்பில் ஏற்படும் ஓர் இயற்கை உந்தலால் தூண்டப்பட்டு, உடல் இச்சை கொண்டு, இன்பமடைய விரும்பி, காதல் வயப்பட்டு, பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் விரும்பிக் காதலிப்பர். பசித் தூண்டலுக்குச் சாப்பிடுவதும், தாகத்துக்கு நீர் அருந்துவதும் உடல் தேவையின் நியதியாகும். தொல்காப்பியம் (தி.மு.680—கி.மு.711):- இனி, எமக்குக் கிடைக்கக்கூடிய காலத்தால் மூத்த சங்க இலக்கிய நூலான தொல்காப்பியம் முதல் மற்றைய நூல்களிலும் காதல் எவ்வண்ணம் பேசப்படுகின்றது என்ற கதைகள் பற்றிக் காண்போம். தொல்காப்பியர் காதலை (1) கைக்கிளை, (2) அன்பின் ஐந்திணை, (3) பெருந்திணை என்று மூன்று பகுதிகளாக வகுத்துள்ளார்.
(1) கைக்கிளை-  என்பது  ஒரு  தலைக்  காமம்.  (கை – பக்கம், கிளை – உறவு).  இதை ஒவ்வாக் காமம் என்றும் கூறுவர். கைக்கிளை புணரா நிகழ்ச்சியாகும்.   கைக்கிளைக்கு  நிலம்  ஒன்றும்  ஒதுக்கப்படவில்லை.  ஏனெனில்  இது  மலராக் காதல், எங்கும் காணப்படலாம்.
(2) அன்பின் ஐந்திணை- இதை அன்புடைக் காமம் என்றும் கூறுவர். அன்பின் ஐந்திணை என்பது ஐந்திணைகளான குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, பாலைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை ஆகிய ஐவகை நிலங்களுக்கேற்ப ஒட்டிய சூழல் சுற்றாடல் ஆகியவற்றோடு இணைந்தனவாய்   குறிஞ்சியில் புணர்தலும், முல்லையில் இருத்தலும், பாலையில் பிரிதலும், மருதத்தில் ஊடலும், நெய்தலில் இரங்கலும் ஆகியன - இயற்கையோடு ஒட்டி நிகழ்வன

ஞாயிறு, 26 மார்ச், 2017

நூல் அறிமுகம்

தகவல்: நுணாவிலூர் கார்த்திகேயன் விசயரத்தினம் - நிகழ்வுகள்
E-mailPrintPDF
இலக்கிய ஆய்வு நூலுக்கான 'எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்' வழங்கிய 'தமிழியல் விருது - 2011', தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்கான ' தமிழியல் விருது - 2014', இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவனமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவனமும் இணைந்து வழங்கும் ' இரா. உதயணன் இலக்கிய விருது - 2016' என்ற மூன்று விருதுகளையும் பெற்றவர் ஆவார்.

தமிழன் தாயகமாம் ஈழத் திருநாட்டின் வடமாகாணத்தின் தென்மராட்சிப் பகுதியில் புகழ் பூத்த நகரான சாவகச்சேரி மண்ணில் நுணாவிலூர் என்னும் பூங்காவில் மலர்ந்தெழுந்த நுணாவிலூர் கார்த்திகேயன் விசயரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட 'சங்ககாலத் தமிழர் வாழ்வியல்' என்ற ஆய்வு நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. இந்நூலில் அறிவியல் பேசும் சங்க இலக்கியங்கள், தொல்காப்பியர் சூத்திரங்கள், சங்ககால மடலேறும் தலைவன், பண்டைத் தமிழர் திருமணங்கள், பிரிவொழுக்க முறைகள், தலைவன் தலைவியர் உடன்போக்கு, வாழ்வியல், களவழி நாற்பதின் மறமேம்பாடு, அறிவுச் சுரங்கமான புறநானூறு, கதை கண்ட காப்பியங்கள், சீவகசிந்தாமணி வாழ்வியல், களவியல் கொணரும் அம்பலும் அலரும் ஆகிய விடயங்கள் பற்றி ஆராய்ந்து கூறப்பட்டுள்ளன.

இந்நூலைப் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விலாசம்.

K. Wijeyaratnam,
35, Southborough – Road, Bickley, Bromley, Kent. U.K. BR1 2EA.
Edition : First Edition, 2016
Publishers: Wijey Publication.
Telephone No: 020 3489 6569.
E-Mail:
 wijey@talktalk.net
Price per copy: £2.99 + postage charges.


பெரியார் சொல்லும் திராவிடர் திருமணம்

பெரியார் சொல்லும் திராவிடர் திருமணம்


தந்தை பெரியார் அவர்கள் "சித்திர புத்திரன்" என்கிற புனைப் பெயரில் 14-03-1950 விடுதலை நாளிதழில் "திருமண விழா: வினா விடை" என்ற தலைப்பில் சுயமரியாதைத் திருமணம் குறித்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அந்த வினா-விடை உங்கள் பார்வைக்காக:

சுயமரியாதைத் திருமணம் என்பது எது?

நமக்கு மேலான மேல் ஜாதிக்காரன் என்பவனை புரோகிதனாக வைத்து நடத்தாத திருமணம் சுய மரியாதைத் திருமணமாகும்.

பகுத்தறிவுத் திருமணம் என்றால் என்ன?

நமக்குப் புரியாததும், இன்ன அவசியத்திற்கு இன்ன காரியம் செய்கிறோம் என்று அறிந்து கொள்ளாமலும், அறிய முடியாமலும் இருக்கும்படியானதுமான காரியங்களைச் (சடங்குகள்) செய்யாமல் நடத்தும் திருமணம் பகுத்தறிவு திருமணம் ஆகும்.

தமிழர் (திராவிடர் திருமணம்) என்றால் என்ன?

புருஷனுக்கு மனைவி அடிமை (தாழ்ந்தவள்) என்றும், புருஷனுக்கு உள்ள உரிமைகள் மனைவிக்கு இல்லை என்றும் உள்ள ஒரு இனத்திற்கு ஒரு நீதியான மனு நீதி இல்லாமல் வாழ்க்கையில், கணவனும் மனைவியும் சரிசம உரிமை உள்ள நட்பு முறை வாழ்க்கை ஒப்பந்தமாகக் கொண்ட திருமணம் தமிழர் (திராவிடர்) திருமணமாகும்.



சுதந்திரத் திருமணம் என்றால் என்ன?

ஜோசியம், சகுனம், சாமி கேட்டல், ஜாதகம் பார்த்தல் ஆகிய மூடநம்பிக்கை இல்லாமலும், மணமக்கள் ஒருவருக்கொருவர் நேரில் பார்க்காமல், அன்னியர் மூலம் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்தும், அல்லது தெரிந்து கொள்வதைப் பற்றிக் கவலையில்லாமல் மற்றவர்கள் கூட்டி வைக்கும் தன்மை இல்லாமலும், மணமக்கள் தாங்களாகவே ஒருவரை ஒருவர் நன்றாய் அறிந்து திருப்தி அடைந்து காதலித்து நடத்தும் திருமணம் சுதந்திரத் திருமணமாகும்.

புரட்சித் திருமணம் என்றால் என்ன?

தாலி கட்டாமல் செய்யும் திருமணம் புரட்சித் திருமணமாகும்.

சிக்கனத் திருமணம் என்றால் என்ன?

கொட்டகை, விருந்து, நகை, துணி, வாத்தியம், பாட்டுக் கச்சேரி, நாட்டியம், ஊர்வலம் முதலிய காரியங்களுக்கு அதிகப் பணம் செலவு செய்வதும், ஒருநாள் ஒரு வேளைக்கு மேலாகத் திருமண நிகழ்ச்சியை நீட்டுவதும் ஆன ஆடம்பர காரியங்கள் சுருங்கின செலவில், குறுகிய நேரத்தில் நடத்துவது சிக்கனத் திருமணமாகும்.

இவைகளையெல்லாம் சேர்த்து நடத்துகிற திருமணத்திற்கு ஒரே பேராக என்ன சொல்லலாம்?

நவீனத் திருமணம் அல்லது தற்காலமுறைத் திராவிடத் திருமணம் என்று சொல்லலாம்.

நன்றி: கி.வீரமணி எழுதிய "சுயமரியாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும்" நூல்