ஞாயிறு, 10 டிசம்பர், 2023

 

‘பொன்விலங்கு’ நாவல் காட்டும் பணியிடக் கலகங்கள்

செ.மெல்வின் ராஜா

உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை

அமெரிக்கன் கல்லூரி, மதுரை-02.

முன்னுரை:

மனித இனம் தோன்றிய காலம் தொட்டே கலகங்களும் உண்டாகியிருக்கின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் திருவிலியத்தில், உலகம் கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட போது மனிதரையும் உண்டாக்கி, அவர்கள் பணிபுரிய ஒரு தோட்டத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தாh.; அந்த தோட்டத்தில் கடவுள் புசிக்க வேண்டாம் என்று சொன்ன மரத்தின் கனியை சர்பத்தின் தூண்டுதலால் பெண் உண்டது மட்டுமல்லாமல் தன் கணவனுக்கும் கொடுத்து புசிக்கவைத்து கடவுளின் கோபத்திற்கு உள்ளாகின்றார்கள். இங்கு பாம்பின் தூண்டுதலே கலகத்தின் ஆரம்பமாய் நான் கருதுகிறேன். அன்று தொடங்கிய கலகங்கள் இன்று வரை நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன. கலகங்கள் தொடர்ந்து மக்களிடையே பலவிதமான தாக்கத்தையும் புதிய அனுபவத்தையும் காலந்தோறும் கொடுத்துக்கொண்டே தான்  இருக்கின்றன. கலகத்தைப் பற்றி தொல்காப்பியர் நூற்பாவின் வாயிலாக பார்க்கும் போது,

“பழையன கழிதலும்,பதியன புகுதலும் காலவகையினானே’ (நன்னூல், சொல்-உயிர்.462)

“பொய்யும் வாழும் தோன்றிய பின்னர் ஐயர் யார்த்தனர் மற்றும் கரணம் என்ப’ (தொல்.பொருள்.களவு.4) என்ற இவ்விரு நூற்பாக்களை ஆராயும் போது இவை கலகத்தின் வாயிலாக தோன்றிய நூற்பாக்களாக இருக்கலாம் என்ற ஐயம் ஏற்படுகின்றது. மேலும் கலகத்தின் மூலமாக உண்டாகும் மாற்றத்தையும் நூற்பா உணர்த்துகின்றன. கலகங்கள் பல இருப்பினும் பணியிட கலகங்கள் மற்ற கலகத்தை காட்டிலும் மாற்றத்தையும், சிக்கலையும் உள்ளடக்கியதாக இருக்கும். மற்ற கலகங்களின் எதிரிகளின் தன்மை, எதிரி யார்?  என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும் பணியிடச் சூழலில் அப்படி கண்டறிவது மிக எளிமையன்று. இவ்வாறாக, பணியிடச் சூழலில் ஏற்படுகின்ற கலகங்களைப் ‘பொன்விலங்கு’ என்ற நாவல் வழி நின்று விளக்குவதாக இக்கட்டுரை அமையப்பெறுகிறது.

பொதுவாக பணியி;ட கலகங்கள்

1.தலைமுறை,

2.அறிவு முதிர்ச்சியின்மை,

3.திறமை,

4.தைரியம்,

5.புத்திசாலிதனம்

ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுகின்றன. பொதுவாகப் பணியிடத்தில் ஏற்கனவே வேலை செய்யும் ஒரு நபர் அங்கு வரும் புதிய நபரிடம் தனது அதிகாரத்தையும,; ஆளுமையும் செலுத்த முற்படுவார். மேலும், தனது அனுபவம் மற்றும் திறமையை புதிய நபரிடம் சொல்லி அவரை மறைமுகமாக எச்சரி;க்கவும் செய்வார். எங்கேயாவது அந்த புதிய நபர் தனது திறமை மற்றும் புத்திசாலித்தனத்தின் மூலமாக முன்னேறும்போது அவரால் ஏற்றுக்கொள்ள முடியாத சூழலில் அந்த புதிய நபர் மீது கோபமும், எரிச்சலும் உண்டாகி அவரைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த நபரின் மீது வீண்பழி சுமத்தி கலகத்தை ஏற்படுத்தி தன்இருப்பை தக்க வைத்து கொள்ள முற்படுவர். அவ்வகையில், நா.பார்த்தசாரதி எழுதிய ‘பொன்விலங்கு’ என்ற நாவலில் இடம் பெற்றுள்ள சத்தியமூர்த்தி என்னும் கதாபாத்திரம் ஏம்.ஏ படித்த பட்டதாரியாகவும், உண்மை, குறிக்கோள், ஒழுக்கம் இவற்றிலிருந்து வழுவாமல் வாழும் ஓர் துடிப்பு மிக்க இளைஞராகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளான். வீட்டில் வறுமை இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளமால் தான் கற்ற கல்விக்கேற்ற வேலைக் கிடைக்கும் வரை காத்திருக்கின்ற இலட்சியவாதியாகவும் ஆசிரியர் காட்டுகின்றார். காரணம், தான் கற்ற கல்வி தன்னை பக்குவத்துடனும், உறுதியுடனும், எதையும் எதிர் கொள்ளும் துணிவைத் தனக்கு தந்திருப்பதாக அவன் கருதினான். இன்றைய இளைஞர்களும் கிட்டதட்ட சத்தியமூர்த்தயின் அதே மனநிலையுடன்  காணப்படுகின்றார்கள். குடும்பச் சுமையும் எதிர்காலமும், தனக்கு ஏற்ற வேலையும் கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு வேலை செய்யும் போது அவனுக்கு ஏற்படுகின்ற கலகங்கள் ஒன்றா, இரண்டா எத்தனையோ, அதைப்போல தான்  சத்தியமூர்த்தியும் வேலைக்கு சென்ற இடத்தில் எத்தனை கலகங்கள்.

நேர்முகத் தேர்வும் நிர்வாகி மற்றும் முதல்வரின் மனநிலையும்

வேலைக்காக காத்துக் கொண்டிருந்த சத்தியமூர்த்திக்கு மலையும் இயற்கையும் இணைந்த ‘மல்லிகைப்பந்தல்’ எனும் ஊரில் இயங்கி வரும் கல்லூரியில் இருந்து நேர்முக தேர்விற்கு அழைப்பு வந்தது. சத்தியமூர்த்தியும் நேர்முக தேர்விற்கு சென்றான். |நேர்முகத் தேர்வில் கல்லூரியின் நிர்வாகியான பூபதியும், முதல்வரும் சத்தியமூர்த்தியிடம் கேள்விகளைக் கேட்க தொடங்கினார்கள். கல்லூரி நிர்வாகியான பூபதி சத்தியமூர்த்தியிடம் “‘எங்கள் கல்லூரியின் பிரின்ஸ்பால்- இவருக்குத் தமிழ் ஆசிரியர்களைப்பற்றி எப்போதும் ஒரு விதமான பயமும் சந்தேகமும் உண்டு’ என்று கூறி அவர் முகத்தை உற்று நோக்கினார். சத்தியமூர்த்தியின் இதழ்களில் புன்னகை மட்டுமே மலர்ந்தது”1 நிர்வாகி கூறியது உண்மைதான் கல்லூரியின் பிரின்ஸ்பாலுக்கு தமிழாசிரியர்களை அறவே பிடிக்காது காரணம் அவர்கள் மாணவர்களை தன்வசப்படுத்தி வருவதோடு, முரட்டுக் குணமும் உள்ளவர்களாக இருப்பார்கள் என்பது அவரது எண்ணம் அதற்கேற்ப சத்தியமூர்த்தியின் பதிலும் அமைந்ததால் பிரின்ஸ்பாலுக்கு சத்தியமூர்த்தியின் மீதும் வெறுப்பு இருந்தது என்றே கூறலாம்.

கலகத்தின் முதல் காரணம் பணியிடத்தில் ஏற்படுகின்ற இத்தகைய நம்பகத் தன்மையையே வயது முதிர்ந்த ஆண்கள் இளைஞர்கள் யாரையும் எளிதில் நம்பி விடுவதில்லை. அவர்கள் தங்களது  கண்களால் ஒருவரை அளவெடுத்து இவன் இப்படிப்பட்டவனாகத்தான் இருப்பான் என்ற மனப்பிம்பத்தை உருவாக்கி தங்கள் மனதில் ஆழப் பதித்து விடுகின்றனர். உதாரணமாக, ‘சாட்டை’ என்ற திரைப்படத்தில் மேற்சொன்ன காட்சி அப்படியே அமைந்திருக்கும். அங்கு வரக்கூடிய புதிய ஆசிரியருக்கும் துணை முதல்வருக்கும் ஆன சந்திப்பே கலகத்தின் வாயில்களாக அமைகின்றன என்ற காட்சியே  கவனிக்கத்தக்க நிகழ்வாகும்.

கல்லூரி நிர்வாகி கேட்கக் கூடிய கேள்விகளுக்குயெல்லாம் சத்தியமூர்த்தியின் பதில் மகிழ்ச்சியினைத் தருவதோடு, இந்த வயதில் இப்படிபட்ட திறமையா? என்ற எண்ணம் மேலோங்குகிறது. மேலும் சத்தியமூர்த்தியின் பதிலைக் கேட்டு அவனைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்தாலும் அதனை வெளிப்படுத்தாது கர்வம் தடுக்கிறது. காரணம், மனம் திறந்து பாராட்டி விட்டால் எதிர்காலத்தில் தன்னை மதிக்கமாட்டான் என்றும் தன் தலையில் ஏறி அமர்ந்து கொண்டுவிடுவானோ என்ற எண்ணம் அவருக்கு எழுகிறது. பொதுவாக மூத்தவர்களிடம்  இந்த எண்ணம் இருப்பது இயல்பே. ஆனால், குறைகளைக் கண்டுபிடித்துவிட்டால் அதனை உடனே அனைவரிடம் கூறி தன்னை பெருமைபடுத்திக் கொள்வதில் ஆர்வமிகுந்தவர்கள் இந்த பணியிடை கலகவாதிகள்.

பொதுவாக பணியிடத்தில் திருமணமாகாத ஆண்களை வேலைக்கு எடுப்பதற்கு தயக்கம் காட்டுவது வழக்கம் காரணம், பணிபுரியும் இடத்தில் பெண்கள் இருப்பார்கள் அவர்களிடம் தவறாக நடந்து கொள்ளும் பட்சத்தில் பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடுவார்களோ என்ற எண்ணம் நிர்வாகிகளுக்கு உண்டு அதே போன்ற சூழ்நிலையையும் சத்தியமூர்த்தி எதிர் கொள்கிறான்.

“மிஸ்டர் சத்தியமூர்த்தி உங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை சரிதானே? இன்னும் இல்லை” என்று சுருக்கமாக பதில் சொல்லி அதற்கு தனது குடும்ப சூழ்நிலை காரணமாகவும் இருப்பதையும் எடுத்து கூறினான்”2 நிர்வாகி கல்லூரி கோ-எஜீகேஷன் கல்லூரி அதன் இந்த கேள்வியைக் கேட்டதாக கூறினார். அதற்கு சத்தியமூர்த்தி என்னால் எந்த பிரச்சனையும் வராது என்று உறுதியளித்தான். நேர்முகத்தேர்வின் இறுதியில் நிர்வாகிக்கு சத்தியமூர்த்தியைப் பல விதங்களில் பிடித்திருந்தாலும் வயதும், இளமையும் வேலைக்கு தடுப்பதாகவும் மனதில் எண்ணினார். இதனை “உணர்ந்த சத்தியமூர்த்தி இளைஞர்களாயிருக்கிற அத்தனை பேரும் அயோக்கியர்கள் என்று நினைக்கும் மனப்பான்மையை வயது மூத்தவர்கள், இனியாவது இந்த தேசத்தில் விட்டு விட வேண்டும.; வயது மூத்தவர்களில் ஒழுக்கம் தவறுகிறவர்களும் வரன்முறையின்றி வாழ்கின்றவர்களும் எத்தனைப் பேர்கள் இருக்கிறார்கள் என்று சத்தியமூர்த்தி உணர்ச்சி வசப்பட்டு பேசியதை கண்டு நிர்வாகி வியந்தார்”;.3

        சத்தியமூர்த்தி சொல்வது உண்மைதான் இன்றைய இளைஞர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. நாட்டின் மீதும், சமுதாயத்தின் மீதும், அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அரசியலில் தவறை சுட்டிக்காட்டுவதிலும், அதற்கான தீர்வுகளைச் சொல்வதிலும் இளைஞர்கள் மற்ற நாடுகளைக் காட்டிலும் முன் உதாரணமான இருக்கிறார்கள் அப்படிபட்ட இளைஞர்களை வயதான மூத்த ஆட்சியாளர்கள் தடுத்து ஒடுக்குகிறார்கள் என்பது வருந்ததக்கது.

சத்தியமூர்த்திக்கு எதிரான முதல்வரின் வெறுப்பும் கலகமும்:

சத்தியமூர்;த்திக்கு பணியில் சேருவதற்கு அனுமதி கிடைக்கிறது மகிழ்ச்சியுடன் சத்தியமூர்த்தி பணியில் அமர்ந்தான் பணியில் சேருவதற்கு முதல் நாள் நிர்வாகி அனைவருக்கும் தேநீர் விருந்தளிக்க ஏற்பாடு பண்ணியிருந்தார். அதில் கல்லூரியில் இந்த ஆண்டு செய்ய வேண்டிய திட்டங்கள், வளர்ச்சிகள், புதிய ஆசிரியர்களின் அறிமுகம் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் ஆங்கிலத்திலேயே பேசினார்கள். சத்தியமூர்த்தியை அறிமுகம் செய்த நிர்வாகி அவனை பேச அழைத்தார். அழைப்பினை ஏற்ற சத்தியமூர்த்தி தமிழில் பேச ஆரம்பித்தான். அப்போது முதல்வர் எழுந்து ஆங்கிலத்தில் பேசுமாறு காதருகே முணுமுணுத்தார். ஆங்கிலத்தில் பேசுவது தான் கௌரவம் என்று கூறினார். அதற்கு சத்தியமூர்த்தி அவர் செவிமட்டும் கேட்குமாறு கூறாமல் எல்லோருடைய செவிக்கும் கேட்குமாறு “சார் -ஐ ஹானர் தி இங்கிலீஷ் பட் ஐ ஒர்ஷீப் தி டமில்.. (நான் ஆங்கிலத்தை மதிக்கிறேன் ஆனால் தமிழை வணங்குகிறேன்”4 என்று அவரைக் குத்திகாட்டிவிட்டு நம்முடைய கல்லூரி முதல்வர் அவர்களை அவமதிக்க கூடாதாகையால் அவருடைய கேள்விக்கு ஆங்கிலத்தில் மறுமொழி கூறியதுடன். இனி தமிழிலேயே பேசுகிறேன் என்று கூறி பேச்சை ஆரம்பித்தான். சத்தியமூர்த்தியின் இந்த பேச்சு நிர்வாகிக்கு பிடித்திருந்தாலும் முதல்வரின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

        வேலை செய்யும் இடத்தில் வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த நபர்கள் தங்களுக்கு கீழ் வேலை செய்யும் நபர்கள் தங்களுடைய சொல் பேச்சையும் கேட்க வேண்டும் என விரும்புவார்கள். சத்தியமூர்த்தியின் இத்தகைய நிலை மேலும் முதல்வரின் வெறுப்புக்கு தீனிபோடுவது போல அமைந்திருந்தது.

        முதல்நாள் பாடவேலையில் புத்தகமின்மையால் மாணவர்களை சும்மா அமர்த்தியிருப்பது சத்தியமூர்த்திக்கு பிடிக்கவில்லை எனவே அவன் ஆங்கில கவிதை ஒன்றை எடுக்க ஆரம்பித்தான். மாணவர்களை தங்கள் வாழ்நாளில் இப்படிபட்ட விரிவுரையைக் கேட்டதில்லை என்று அவனை புகழ்ந்து தள்ளினார்கள். அதற்கு நிர்வாகியும் விதிவிலக்கல்ல இந்நிலையில் சத்தியமூர்த்தியை சந்தித்த தமிழ்த்துறை முதல்வர் “இனிமேல் தமிழ்ப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் எந்த வகுப்பு போனாலும் தமிழையே நடத்த வேண்டும் என்கிறார் பிரின்ஸ்பால் என்று கூறினார். அதற்கு சத்தியமூர்த்தி இனி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியதோடு”5 “மனதில் பெரிய பட்டங்களைப் பெயருக்கு முன்னும் பின்னும் போட்டுக் கொண்டு நவநாகரிக உடையணிந்து படிப்பும் பதவியும் உண்டாக்கிய கௌரவத்தோடு நடக்கிற முதிய மனிதர்களிடம் கூட இத்தனை பலவீனங்களும், ஆற்றாமைகளும், அசூயைகளும் இருப்பதை எண்ணி சிந்தித்தான்.”6 இன்றைய இளைஞர்கள் இத்தகைய போட்டிகளையும், பொறாமைகளைவும் எளிமையாக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு தங்களை மாற்றிக் கொண்டுள்ளனர்.

        சத்தியமூர்த்திக்கும், முதல்வருக்கும் இடையேயான கருத்து மோதல் தொடர்ந்து கொண்டே இருந்தன. சத்தியமூர்த்தியைப் பற்றி முதல்வர் குறை கூறினாலும் நிர்வாகி சத்தியத்தின் மீது உள்ள நம்பிக்கையால் அதனைக் காதில் வாங்கிக் கொள்வதில்லை. முதல்வருக்கு எவ்வளவு வெறுப்பு வந்ததோ அவ்வளவு நம்பிக்கை நிர்வாகிக்கு சத்தியமூர்த்தி மீது இருந்தது. எனவே, சத்தியமூர்த்தியை உதவி வார்டனாக பணியமர்த்தினார். ஆரம்பத்தில் பதவியை ஏற்றுக்கொள்ளத் தயங்கினாலும் பிறகு அப்பணியைச் சிறப்புடன் செய்தான் சத்தியமூர்த்தி அதிலுள்ள குறைகளைக் கலைந்து மாணவர்களின் தேவைகளை நேரிடையாக நிர்வாகியிடம் தெரிவித்தான் சத்தியமூர்த்தி இதனால் முதல்வருக்கு வெறுப்பு அதிகமானது. பணியிடத்தில்  புதியவர்கள் முன்னேற்றம் பழையவர்களின் வெறுப்புக்குக் காரணமாக அமைகின்றன.

        ஓவ்வொரு நாளும் புதிய அனுபவத்தையும், பிரச்சனைகளையும் சந்தித்துக் கொண்டிருந்த சத்தியமூர்த்திக்கு பேரிடையாக நிர்வாகியின் மரணம் அமைந்திருந்தது. வந்திருக்கின்ற புதிய நிர்வாகியான மஞ்சள்பட்டி ஜமீன்தாரின் மீது நல்ல எண்ணமில்லை காரணம் அவர் படிப்பறிவு இல்லாதவராகவும் செல்வத்தின் மூலம் எதையும் சாதிக்கின்ற பெரிய மனிதர் என்ற உண்மை அவனுக்கு தெரிந்திருந்தது. முதல்வருக்கு இத்தகைய சூழல் கலகம் செய்ய ஏதுவாக இருந்தது.

        அன்று கல்லூரியில் நடைபெற்ற புதிய நிர்வாகியின் அறிமுக கூட்டத்தில் அனைவரும் நிர்வாகிக்கு மாலை அணிவிக்க சத்தியமூர்த்திக்கு விழாவில் மனமில்லாமல் எழுந்து சென்றுவிட அது நிர்வாகிக்கு எரிச்சலையூட்டியது அதற்கேற்ப முதல்வரும்  “நிர்வாகியின் கோபத்திற்குத் தூபம் போட்டு வளர்த்தனர்”7. பணியிடத்தில் ஒருவனை கவிழ்க்க வேண்டுமானால் இவ்வாறாக கலகங்களை ஏற்படுத்துகின்றனர்.

        புதிய நிர்வாகியும்  பிரின்ஸிபாலும் சத்தியமூர்த்தியை பழிவாங்க எண்ணி சத்தியமூர்த்தியின் வார்டன் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என வற்புறுத்த, அதற்கான காரணத்தை சத்தியமூர்த்தி கேட்க “புதிய நிர்வாகிக்கு நீங்கள் வார்டனாக இருப்பது பிடிக்கவில்லை”8 என்று கூறினார். இந்த காரணத்தை மாணவர்களுக்கு தெரியப்படுத்தி என்னை டிஸ்மிஸ் செய்யுங்கள் என்றான். அடுத்த சில நிமிடங்களிலேயே சத்தியமூர்த்தியிடமிருந்து அந்த வார்டன் பதவி பரிக்கப்படுகின்றது.

        பணியிடத்தில் பழிவாங்க வேண்டுமென்றால் அவனை மிரட்டி பணிய வைப்பது அல்லது அதனை சத்தமில்லாமல் செய்து தனது காரியத்தைச் சாதிப்பது, நிர்வாகிகளுக்கு உள்ள திமிர் என்றே கூறலாம்.

இந்தச் செய்தி  காட்டுத்தீயைப் போல மாணவர்களின் மத்தியில் கலகத்தை ஏற்படத்தியது. இது முதல்வரின் கலகம் போல அல்லாமல் நன்மையை நோக்கிய கலகமாக முன்னெடுக்கப்படுகிறது. விடுதி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக உணவு அருந்தாமல் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். நாளுக்கு நாள் இந்த போராட்டம் வலுத்தது. அனைத்து மாணவர்களும் சத்தியமூர்த்தியின் பக்கம் இருந்தார்கள். ஆனால், நிர்வாகியும், முதல்வரும் இந்த பழியை சத்தியமூர்த்தியின் மீது சுமத்தி அதற்கான விளக்கத்தை கேட்டிருந்தார்கள். அதற்கு பதிலளித்த சத்தியமூர்த்தி “நீங்கள் தான் உங்கள் செய்கையின் மூலமாக அருமையான மாணவர்களைத் தூண்டுகிறீர்கள்”9 என்றான் சத்தியமூர்த்தி

சத்தியமூர்த்தியின் மீது பொய் பழியைச் சுமர்த்த எண்ணிய கலகக்காரர்கள் கல்லூரியின் கூரை ஷெட்டுக்கு தீவைத்து எரித்ததோடு மட்டுமல்லாமல் அந்த பழியை சத்தியமூர்த்தியின் மீது சுமத்திச் சிறை செல்ல வைத்தனர். இந்த நிலை தனிமனிதனுக்கு எதிரான கலகமாக இருந்தாலும் அது மாணவ சமுதாயத்தை பாதிப்படையச் செய்து போராட்டம் தீவிரமடைந்தது. நிர்வாகம் கலகத்தை கட்டுப்படுத்த தவறியது எனவே அரசாங்கம் ஒரு குழுவை நியமித்து காரணத்தை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அக்குழு தீர விசாரித்ததில் நிர்வாகியும், முதல்வரும் செய்த கலகமே இத்தனைக்கும் காரணமாக அமைந்தது என்பதனைத் தெரிந்து கொண்ட அக்குழு சத்தியமூர்த்தியின் ஆசிரியப்பணியை பாராட்டியது. மேலும் முதல்வரையும், நிர்வாகியையும் எச்சரி;த்தது. அக்குழுவின் தலைவர் “உங்களுக்கு கல்லூரி நிர்வாகிக்கும் இடையே எவ்வளவு பிரச்சனை, வேறுபாடுகள் எல்லாம் உண்டாகி அவற்றிலிருந்து நீ தப்பி வென்றுவிட்டாலும் இனி உன்மேல் வைரம் வைத்து கொண்டு பழிவாங்க அவர்கள் நேரம் பார்த்திருப்பார்கள், தனியார் நிர்வாகத்திலுள்ள எல்லா கல்லூரிகளிலும் இவ்வாறான பாரபட்சம் நிறைய உண்டு. இனி இங்கு வேலை செய்ய வேண்டாம் அறிவுறுத்தியதோடு சத்தியமூர்த்தியின் அறிவுதிறனை பார்த்து அரசு வேலைக்கும் ஏற்பாடும் செய்தனர்”10.

முடிவுரை:

‘பொன்விலங்கு’ நாவல் காட்டிய பணியிட கலகம் ஒரு முன் மாதிரிதான் நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் துறையில் தனிமனிதனுக்கு எதிராகவோ அல்லது குழுவிற்கு எதிராக நாளும் கலகங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. காரணம் முன்சொன்ன அந்த கருத்துகளே கலகங்கள் நன்மையில் முடியும் என்பதைப்போல நாளடைவில் சத்தியமூர்த்திக்கு நல்ல வேலை கிடைத்தது. ஆனால் இது நடைபெறுமா? என்பதில் எந்தவித சாத்தியமில்லை என்பது மறுக்க முடியாத உண்மையே. “நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும்” என்ற வழக்கமொன்று உண்டு. அதுபோல பணியிடங்களில் உண்டாகும் கலகங்கள் நன்மையில் முடிந்தால் நன்றே. பொன்விலங்கு நாவலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சத்தியமூர்த்தி போன்ற பாத்திரப்படைப்பு இன்றளவும் உலகளவில் கல்வி நிறுவனங்களில் இளைய ஆசிரியர்கள் மூத்த ஆசிரியர்களால் அங்கீகரிக்கப்படாத சூழல் தொடர்ந்து கொண்டே வருகிறது. மூத்த ஆசிரியர்களுக்கும், இளைய ஆசிரியர்களுக்கும் இணக்கமான சூழல் உண்டாகும்போது தான் பணியிடக் கலகங்கள் தவிர்க்கப்படும் என்பதே நிதர்சனம்.

மேற்கோள் விளக்கக் குறிப்புகள்:

1.நா.பார்த்தசாரதி, பொன்விலங்கு, ப.19

2.மேலது.ப.29

3.மேலது.ப.31

4.மேலது.ப.223

5.மேலது.ப.232

6.மேலது.ப.234

7.மேலது.ப.458

8.மேலது.ப.472

9.மேலது.ப.477

10.மேலது.ப.567

 

                                ______________________________

 

                                          

முக்கூடற் பள்ளில் கலகக்குரல்

வை. அருட்செல்வி

                                            துணைப் பேராசிரியர்,அரசுக்கல்லூரி

                                            மூணாறு

    

தமிழ் இலக்கிய வரலாற்றில் காலந்தோறும் பல இலக்கிய வகைகள் தோன்றியுள்ளன.  செவ்வியல் இலக்கியங்கள், அறஇலக்கியங்கள், காப்பியங்கள் என அழியாப் புகழ்பெற்ற இலக்கிய வரலாற்றை உடையது தமிழ் இலக்கியம்.  அந்த வகையில் சிற்றிலக்கியமும் கருத்தாழம் மிக்க ஓர் இலக்கிய வகையாகும்.  பாட்டியல் நூல்கள் தொண்ணூற்றாறு வகையான சிற்றிலக்கியங்களைப் பட்டியலிடுகின்றன. இவ்விலக்கிய வகை அமைப்பிலும், பாடுபொருளிலும் புதுமை உடையது.  எனவே தான் தொல்காப்பியர் புத்திலக்கிய வகைகளை “விருந்து” என்னும் வனப்பினுள் கொண்டு வந்துள்ளார்.

“விருந்தே தானும் புதுவது கிளந்தயாப்பின்மேற்றே”

                                  (தொல்.பொருள்.செய் -231)

     சங்க இலக்கியங்களும், காப்பியங்களும் புலமை இலக்கியங்களாகவே படைக்கப்பட்டன.  இருப்பினும் எளிய மக்கள் புரிந்து கொள்ளும் அளவு எளிமைப்படுத்தப்பட்ட பாடல்களும் இருக்கின்றது.  சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் வரிப்பாடல்களை உதாரணமாகக் கூறலாம்.  சிற்றிலக்கியங்கள் காலம்வரை சாதாரண மக்களுக்கென்று முழுமையான இலக்கியங்கள் படைக்கப்படவில்லை என்றே கூறலாம்.  பள்ளு, குறவஞ்சி, நொண்டி போன்ற சிற்றிலக்கியங்கள் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் நாடகத்தன்மை வாய்ந்த இலக்கிய வகையாகும். தொல்காப்பியம் எளிய மக்களுக்கான இலக்கிய வகையை “புலன்” என்னும் வனப்பினுள் கொண்டுவருகிறது.

      “சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து

       தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்

       புலனென மொழிப் புலனுணர்ந்தோரே.”          (தொல் செய்.233)

இங்கு “சேரி மொழி” என்பது நேரடியாக உணரக்கூடிய சொற்களைக் கொண்டு இலக்கியம் படைப்பதாகும்.

கலகக்குரல் :

     காதலும், வீரமும் இருகண்களாகப் போற்றப்பட்ட தமிழ் மரபில், இன்று “காதல்” என்பது கண்டிக்கத்தக்க செயலாகக் கருதப்படுகிறது.  வீரம் அறமற்ற செயலாக மாற்றம் பெற்றுவிட்டது.  எனவே தான் “போர்த்தொழில் புரியேல்” என்று ஒளவையார் கூறியுள்ளார்.  இது கலகக்குரலின் தொடக்கம் என்று கூறலாம்.  தெய்வத்தையும், அரசர்களையும் கதைமாந்தர்களாகக் கண்ட காப்பியக் காலத்தில் இளங்கோவடிகள் படைத்த சிலப்பதிகாரம் ஒரு கலகக்குரல் தானே!.

     பாமர மக்களுக்காகப் படைக்கப்பட்ட சிற்றிலக்கியங்களில் “பள்ளு” இலக்கிய வகை உழவர் இலக்கியமாகவே போற்றப்படுகிறது.  சிற்றிலக்கியங்களின் இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்களில் பள்ளு என்னும் இலக்கியத்திற்கான இலக்கணம் கூறப்படவில்லை உழத்திப்பாட்டு என்னும் இலக்கிய வகையே அறிமுகம் செய்யப்படுகிறது.

     “புரவலர் கூறி அவன்வாழிய வென்று

      அகல்வயல் தொழிலை ஒருமை உணர்ந்தனன்

      எனவரும் ஈரைந் துழத்திப் பாட்டே”         (பள்ளிருபாட்டியல்.216)

பள்ளு இலக்கிய நூல்களில் “முக்கூடற்பள்ளு” முதன்மையானதாகக் கருதப்படுகிறது.  புலவர்களால் படைக்கப்படும் இலக்கியங்களில் உள்ளத்து உணர்வுகள் வெளிப்படும்.  அந்த வகையில் முக்கூடற்பள்ளில் காலங்காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் விவசாயக் கூலிகளின் உள்ளுணர்வு அங்கதச் சுவையோடு கூடிய கலகக்குரலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கூடற் பள்ளு :-

     முக்கூடலில் கோயில் கொண்டிருக்கும் அழகர் மீது பாடப்பட்டதாகும்.  தாமிரபரணி நதியோடு சிற்றாறும், கயத்தாறும் கூடும் இடமே முக்கூடல் என வழங்கப்படுகிறது.  பள்ளன், பள்ளியர், குலப்பெருமைகளும், நாட்டுவளமும், நகர்வளமும் பாடப்பட்ட சிறப்பான நூல்.  தமிழர்களின் விவசாயத்தை புகழ்ந்து பாடிய நூல்.  இதில் கூறப்பட்டுள்ள, நெல்வகைகளும், மாடுவகைகளும், ஏர்வகைகளும், மீன்வகைகளும் நம்மை வியக்க வைக்கின்றன.  தமிழர் பண்பாடுகளை பறை சாற்றும் திருவிழாக்கள், தெய்வவழிபாடுகள் ஆகியவை போற்றுதலுக்குரியன.  இவ்வளவு சிறப்புக்களைப் பெற்ற முக்கூடற் பள்ளில் விவசாயிகளின் துன்பங்களை, வெளிப்படுத்தும் சிலக்கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன என்பதை மறுக்க முடியாது.

     உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முறையை “மெய்ப்பாடு” என்கிறோம்.  தொல்காப்பியம் மெய்ப்பாட்டியலில் எண்வகை மெய்ப்பாட்டினைக் கூறும் போது அவை தோன்றுவதற்கான காரணங்களைக் கூறுகிறது.  எண்வகை மெய்ப்பாட்டில் வெகுளி என்ற மெய்ப்பாடே கலகக்குரலின் வெளிப்பாடு என்றும் கூறலாம்.

     “உறுப்பறை குடிகோள் அலைகொலை என்றன

      வெறுப்ப வந்த வெகுளி நான்கே”       (தொல். மெய்.254)

இதற்கு உரையெழுதிய இளம்பூரணர் உறுப்பறை, குடிகோள், அலை, கொலை “இப்பொருள் நான்கும்;, தான் பிறரைச் செய்யுங்காலும் வெகுளி பிறக்கும்; தன்னை பிறர் செய்யுங்காலும் வெகுளி பிறக்கும் என்று கொள்க” என்கிறார்.  இதில் குடிகோளாவது கீழ்வாழ்வாரை நலிதல் என்றும், அலை என்பது வைதலும், புடைத்தலும் ஆகும்.  முக்கூடற்பள்ளில் இந்த இரண்டு மெய்ப்பாடுகளே கலகக்குரல்களாக வெளிப்பட்டுள்ளன.

     உழைக்கும் மக்களால் தங்களது கோபத்தை நேரடியாகக் காட்டமுடியாது.  தன்னை அடிமைப்படுத்துபவர்களை  நையாண்டி செய்வதன் மூலம் அவர்களுக்கு மன அமைதி கிடைக்கிறது.  முக்கூடற் பள்ளில் உழவர்களின் கோபம் பள்ளன், பள்ளியர் வாயிலாக வெளிப்படுகிறது.  மருத நில வளங்களையெல்லாம் கூறிய ஆசிரியர் பண்ணைக்காரன் வருகையின் போது அவனின் தோற்றத்தை வருணணை செய்வதில் எள்ளல் கலந்த வெகுளி வெளிப்படுவதை உணரமுடிகின்றது. 

     நமக்குப் விருப்பமில்லாத ஒருவர் எவ்வளவு அழகாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள நம்மால் முடியாது.  இதைத்தான் பண்ணைக்காரனின் தோற்றத்திலும் காணமுடிகின்றது.  முக்கூடற் பள்ளு கூறும் பண்ணைக்காரன் தோற்றத்தை கற்பனை செய்து பாருங்களேன்.  நகைச்சுவை தோன்றும்.  பண்ணைக்காரனை நேரடியாக வசைமொழி கூறமுடியாத நிலையில் அங்கு அவனது தோற்றம் வசைபாடப்படுகிறது. இது ஒரு வகையான கலகக்குரலின் உத்தி என்றே கூறலாம் பண்ணைக்காரனின் தோற்றம்

     “மாறு கண்ணும் பருத்திப்பையின்

        கூரை வயிறும் - கீரை

      மத்துப்போல் தலையும் சுரை

        வித்துப்போல் பல்லும்

      நீறு போல் வெளுத்த உளளை

        யூறு நாசியும் - தட்டி

      நெரித்த மாங் கொட்டை போல் ஈ

        அறிந்த வாயும்

      தாறு மாறாய் மீசையில் அஞ்

        சாறு மயிரும் - தூங்கற்

                                      சண்ணைக் கிடாப்போல் நடையும்

        மொண்ணை முகமும்

      வேறு கீறி ஒட்ட வைத்த

        ஏறுகாதுமாய் - நேமி

      வீரனார் முக்கூடற் பண்ணைக்

        காரனார் வந்தார்.

வருணிக்கப்பட்டுள்ளது.  பண்ணைக்காரன் தலைமுதல் பாதம் வரை கூறப்பட்டுள்ள உவமைப் பொருட்களைப் பாருங்களேன்.  கண்கள் மாறுகண், வயிறு பருத்திப்பை, தலை கீரையைக் கடைவதற்குப் பயன்படும் மத்துப்போன்ற வழுவழு என்றிருக்கும் வழுக்கைத்தலை, சுரைவித்துப் போன்ற பெரிய பற்கள். ஊளைவடியும் மூக்கு, அவனுடைய வாயோ மாங்கொட்டைப் போன்றுள்ளது.  அதுமட்டுமா? மீசையில் ஐந்தாறு மயிர்கள் மட்டுமே உள்ளன.  அவனது நடையோ ஆட்டுக்கிடாய் நடப்பதைப் போன்றுள்ளது.  காதுகள் தனியாக வெட்டி ஒட்டவைத்ததைப் போன்று உள்ளது.  மொத்தத்தில் வடிவமற்ற முகத்தை உடையவன் என்று கூறப்பட்டுள்ளது.  தங்களை எப்பொழுதும் அலைக்கழித்துக் கொண்டிருக்கும் பண்ணைக்காரன் மீதான வெறுப்பினை வருணணை என்னும் வெளிப்பாட்டால் கலகக்குரல் கொடுத்துள்ளார் ஆசிரியர்.

     அடுத்ததாக பண்ணைக்காரனின் குணநலன்களைக் கூறுகிறார்.  பண்ணைக்காரர் மூத்த மனைவியான மூத்த பள்ளியின் முகம் பார்த்துச் சில சொற்களைப் பேசுவார்.  ஆனால் இளையபள்ளி பேசுவதைப் பெருமூச்சு விட்டுக்கொண்டு கேட்டுக்கொண்டிருப்பார்; சாத்தி என்னும் பள்ளியின் மகளான காத்தியைத் தன்னுடைய பேத்தி என்று முறை கொண்டாடுவார்.  பின்பு மெதுவாய் அவளை நோக்கிச் சைகை காட்டி அப்புறமாய்க் களத்து மேட்டிற்கு வா என்று கூறுவார்; தூய்மையற்ற வாய்க்குப் புகை பிடிக்கத் தோன்றினால் புகையிலைக்கு நெருப்பு பற்றவைக்கச் சொல்வார்.   

      “காத்திராத பள்ளன் பர

        மார்த்தி என்பாராம் - குச்சிற்

       கண்ணைச் சாய்ப்பா ராம் முக்கூடற்

         பண்ணைக் காரனார்.

பண்ணைக்காரன் மீது உள்ள வெறுப்பினை அவனது தோற்றத்தின்; வாயிலாக குணநலன்களைக் கூறும் முறையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  இது தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தும்.  மேலும், பள்ளியரை வருணணை செய்யும் போது

     “உள்ளத்தி லூசலிடும் உல்லாசப் பார்வை விழிக்

        கள்ளத்தி னாலிரும்புங் கல்லுங் கரையாதோ

      வெள்ளத்தி லேதுயில்கார் மெய்யழகர் முக்கூடல்

        பள்ளத்தி யார் அழகு பார்க்க முடியாதே.”

பாற்கடலில் துயில் கொள்ளும் கருமை நிறமுடைய அழகர் கோயில் கொண்டிருக்கும் முக்கூடல் நகரில் வாழ்கின்ற பள்ளியர்களின் அழகு போல் வேறு எங்கும் பார்க்க இயலாது என்கிறார்.  பள்ளனின் வரவு கூறுமிடத்து “கறுக்குங்கிடாய் மருப்பின் முறுக்கு மீசையும்” என்று வருணித்துள்ளார்.  அவனை “வடிவழகக்குடும்பன்” என்கிறார்.

     முடிவாக இலக்கியங்களில் சமகாலப் பிரச்சனைகளைக் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் உணர்த்தியுள்ளன.  பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட சிற்றிலக்கியங்களில் ஒன்றான முக்கூடற் பள்ளில் உழவர்களின் உணர்வுகளை வெகுளி என்னும் மெய்ப்பாட்டின் வாயிலாக கலகக்குரல் கொடுத்துள்ளார் ஆசிரியர் என்பதையும், அது பண்ணைக்காரனை வருணிப்பதன் வாயிலாக வெளிப்பட்டுள்ளது என்பதையும் இக்கட்டுரை விளக்கியுள்ளது.

 

மெய்கண்டார் காட்டும் அத்துவிதம்

                                                  .கு.இராணி,

                             முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,

                                     தியாகராசர் கல்லூரி,மதுரை-9.

   

 மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவது சமயமாகும். உலகில் தோன்றியுள்ளச் சமயங்கள் பலவாகினும் அவற்றின் குறிக்கோள் ஒன்றாகவே அமைந்துள்ளது. அத்தகு குறிக்கோள் உயிர் இறைவனது திருவடியைப் பற்றுவதாகும். இறைவனது திருவடியைச் சேர்தலின் அவசியத்தைப்பற்றுக பற்றற்றான் தாளினைஎன வள்ளுவரும் உணர்த்தியுள்ளார். அவ்வாறாயின் இறைவனது திருவடியைச் சென்றடைந்த உயிரின் நிலை எவ்வாறு இருக்கும்? என்பது பலரின் வினாவாக அமைந்துள்ளன. இத்தகு வினாவிற்குரிய விடையைச் சமயங்களில் உள்ளாகவே காணவேண்டியுள்ளது. இறைவனது திருவடியைச் சென்றடைந்த உயிரின் நிலைவேறற்றுஇருக்கும் என்பர் சித்தாந்த நூலாசிரியர்.  இந்நிலைக்குஅத்துவிதம்என்றும் பெயர் கூறுவர். தனித்தும், பிரித்தும் பெயர் கூற இயலாதத் தன்மையுடன் இருக்கும் நிலையை ஒத்ததாகும் என்றும் பொருள் வழங்குவர். இவ்வாறு அத்துவிதத்திற்கானப் பொருள் நிலைப் பல்வேறு நிலையில் பலவிதமான விளக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு விளக்கி வரும்  சமயங்கள் வைணவம், சமணம், பௌத்தம், சைவம் என்பனவாகும்.

                      பொதுவாக  கடவுள் உண்மையை ஏற்றுக்கொள்ளும் கருத்தில் பல்லேறு சமயங்களுக்கிடையே பலவித வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவற்றுக்குள்ளும்அத்துவிதம்என்பதற்குள் பொருள் காண்பதில் தான் வேறுபாடு மிகவும் காணப்படுகின்றது. அத்துவிதத்தில் தோன்றிய வேறுபாட்டின் காரணமான கேவல அத்வைதம்(சங்கரர்), விசிஷ்ட அத்வைதம்(இராமானுசர்), துவைதம்(மத்துவர்) என்ற மூன்று கோட்பாடுகள் உருவாகின என்பர் தத்துவநூலார். தமிழ் நாட்டின் தென்பகுதியினரான இம்மூவரும் உபநிடதங்களையும், பிரம்ம சூத்திரத்தையும், பகவத் கீதையையும் சிறந்த பிரமாண நூல்களாகக் கொண்டனர். இராமானுசர் வைணவ திவ்யபிரபந்தங்களையும் உடன் கொண்டிருந்தார். இவர்களைத் தவிரசுத்த அத்வைதம்என்ற அத்வைதத்தைத் தென் பகுதியைச் சார்ந்த மெய்கண்டார் எடுத்துக்காட்டியுள்ளார். இவர் உபநிடதத்தைப் பொதுவாகவும், சிவாகமம், திருமுறை, திருக்குறள் முதலானவற்றைப் பிரமாண நூல்களாகச் சிறப்பாகவும் கொண்டனர். இவரது கொள்கைசித்தாந்த சைவம்எனப்படும். இவர் சொன்ன சுத்த அத்வைதமே உண்மையான அத்வைதம் என்பதும் மற்றையோர் கூறியன உண்மையானவை அல்ல என்பதும் மெய்கண்டார் அருளிய சிவஞானபோதத்துக்கு மாதவஞ் சிவஞான முனிவர் அருளிய சிவஞான மாபாடியம் என்னும் உரையில் நன்கு விளக்கி எழுதப்பட்டுள்ளன. ஆதலால் சைவசமயத்தின் அருளாளராகத் திகழும் மெய்கண்டார் காட்டும் அத்துவித விளக்கமே சரியானதாகும் என்பது இக்கட்டுரையின் நோக்கமாக அமைந்துள்ளது.

அத்துவிதம்

     அத்துவிதம் என்பது இரண்டு பொருள்கள் இருந்தும் இரண்டு என்று கூற இயலாதப்படி ஒன்றாவதைக் குறிப்பதாகும். கண்ணால் காணக்கூடியப் பருப்பொருளில் இத்தகைய நிகழ்வு ஏற்படுவதில்லை. இந்நிகழ்வு கண்ணிற்குப் புலப்படாத சூக்குமமாய் அமைந்துள்ள அறிவினுள் ஏற்படுவதாகும்.

     பேரறிவுடைய இறைவன் உயிர், உலகப் பொருளுடன் வேற்றுமை இல்லாமல் கலந்திருக்கிறான். இவ்வாறு கலந்திருக்கும் நிலையில் இறையும் உயிரும் இரண்டு என்னும் தன்மைத் தோன்றாமல் ஒன்றெனும் தன்மையுடன் இருக்கின்ற நிலையைஅத்துவிதம்என்பர். ஆதலால் அத்துவிதம் என்பது பொருளால் இரண்டாகவும், கலப்பினால் ஒன்றாகவும் அமைந்திருப்பதைக் குறிப்பதாகும். மேலும் ஒன்று என்று சொல்ல முடியாததாய் இரண்டு - இரண்டாய்த் தோன்றாது இரண்டு என்னும் கருத்தில்அத்துவிதம்என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கேவலஅத்வைதமும் சித்தாந்தசைவமும்

                       சங்கரர் தத்அபாவம் என்னும் இன்மைப்பொருள் கொண்டவர். - துவைதம் இரண்டில்லை. ஒன்றுதான் உள்ளது என்பது இவர் கொண்ட பொருளாகும். சங்கரருடையக் கொள்கைஏகான்மவாதம்என்பர் சமயநூலார். அதாவது பரமாத்மா எனப்படும் ஒருபொருள் மட்டுமே உண்டு. அதுவே பிரம்மப் பொருள் என்பர். பொன்னுக்கும் பொன்னாலான ஆபரணங்களுக்கும் எப்படிப் பேதம் சொல்லுதல் இயலாதோ, அப்படியே பிரம்மத்துக்கும் உயிர்களுக்கும் பேதம் சொல்லுதல் இயலாது. இதனையே அபேதவாதம் என்றும் கேவல அத்வைதம் என்றும் கூறுவர். சங்கரருடையக் கூற்றை சைவநூலாசிரியர் பின்வருமாறு மறுத்துப் பொருள் கூறுகின்றனர். அதாவது, இன்மை என்பது பொருளின் இல்லாமையை மட்டுமே உணர்த்தும் பொருளாகும் என மறுத்துள்ளனர். மேலும்ஏகம்என்பது நிலையான, தனக்கு மேலான, தனக்கு இணையாக, இன்னொரு பொருளில்லாமல், பிறபொருளின் கலப்பினால் தனது தன்மைக் குறைப்படாமல் இருப்பதைக் குறிப்பதாகும். ஆதலால் இறைக்கும் உயிர்க்கும் இடையே உள்ளத் தொடர்பைஏகம் - ஒன்றுஎனக் கூறுதல் பொருந்தாது என்பர்.  ஆதலின் அத்துவிதம் என்பதற்கு இரண்டு இல்லை என்றும் அதன் கருத்து ஒன்று என்றும் பொருள் கொள்வது பொருந்தாது என்பர்.

விசிஷ்டாத்வைதமும் சித்தாந்த சைவமும்

     இராமானுசர் சித்(உயிர்), அசித்(உலகப்பொருள்), ஈஸ்வரன்(கடவுள்) என்ற மூன்று பொருள்களும் உண்மைப் பொருளெனக் கொண்டவர். சித்தும் அசித்தும் பிரம்மப் பொருளுக்கு உடம்பு என்றும், பிரம்மப் பொருள் அவ்வுடம்பில் கலந்திருக்கும் உயிர் என்றும் பொருள் கூறுவர். பிரம்மப் பொருளுக்கு சிறப்பிலக்கணம் வகுத்தளித்தவர். இத்தகைய கருத்தெல்லாம் சித்தாந்த சைவத்துடன் ஒன்றியே செல்லினும், அத்துவிதம் இரண்டில்லை என்று இன்மைப்பொருள் கொண்டதால் இவருடையக் கருத்தும் சைவத்துக்கும் பொருந்தாததாகவே உள்ளது என்பர் சைவநூலாசிரியர். மேலும் இறை மற்றும் உயிர்க்கு கூறும் இலக்கணமும், தத்துவத்தின் எண்ணிக்கையும் சித்தாந்தத்திற்கு மாறாகவே உள்ளன. பிரம்மப் பொருளுக்கும், பிரபஞ்சத்துக்கும் உள்ள சம்பந்தம் சொல்லுக்கும், பொருளுக்கும் உள்ள சம்பந்தம் போல்பேதாபேத சம்பந்தம்உடையதெனக் கூறுகிறார். இறைவன் உலகாக பரிணமிப்பதால் இறை, உலகம்அபேதம்மற்றும்பேதம்என்பது இவரது கொள்கையாக அமைந்துள்ளது. 

துவைதமும் சிந்தாந்த சைவமும்

      மத்துவரும் இன்மைப்பொருள் கொள்கையினராவார். பிரம்மமும் உயிர்களும் பேதப் பொருள்களாகும் என்கிறார். இத்தொடர்பைஇருட்டும் வெளிச்சமும் போல்என்ற உவமையால் விளக்கம் தருவர். இவ்விரண்டும் எப்பொழுதும் ஒன்றாவதில்லை என்பது இவரது கொள்கையாகும். இறை, உயிர், உலகம் என்ற முப்பொருளுண்டு. அம்முப்பொருளும் தங்களுள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுப்பட்டுள்ளன என்ற மத்துவரின் கருத்து சைவத்திற்கு உடன்பாடுதான் என்றாலும், அத்துவிதம் என்பதற்கு இன்மைப் பொருள் கொண்டதும், இறை உயிர் எப்பொழுதும் ஒன்றாகச் சேர்வதில்லை என்பதும்  சித்தாந்த சைவத்துடன் பொருந்தாததாக அமைந்துள்ளது.

மெய்கண்டார் காட்டும் அத்துவிதப் பொருள்

      மெய்கண்டார் அன்மைப்பொருள் கொள்கையைக் கொண்டவராவார். அவர் கூறும் அன்மைப் பொருள் -துவிதம் இரண்டன்று என்பதாகும். அதாவது இரண்டு பொருள்கள் இரண்டற்று நிற்பதைக் குறிப்பதாகும். ஒன்று போல் தோன்றும் இரண்டு பொருள்கள் உள்ளன என்பதாகும். இரண்டு உண்டு ஆனால் இரண்டு எனல் பொருந்தாது. அவைப் பிரிந்து நிற்றல் இல்லை. ஆகவே கலப்பினால் ஒன்றாகத் தோன்றுகிறது. இந்தச் சிக்கலை நீக்குவதற்குத் தான் ஒன்று (ஏகம்) என்று சொல்லாமல்அத்துவிதம்;’ என்று சொல்லப்பட்டது என்பது மெய்கண்டார் தரும் விளக்கமாக அமைந்துள்ளது. இக்கருத்தினையே மெய்கண்டாரின் மாணாக்கராகிய அருணந்திசிவம் தமது இருபா இருபஃது என்னும் நூலில்ஒன்றாகாமல் இரண்டாகாமல் ஒன்றும் இரண்டும் இன்றாகாமல்” (செய்.20) என விளக்கியுள்ளார். இறை, உயிர், உலகம் என்னும் முப்பொருளும் தனதியல்பால் வேறுப்பட்டிருப்பினும் இறைவனின் இருப்பின்றி உலகும் உயிரும் தனித்து செயல்படுவதில்லை. இறைவன் எங்கும் நிறைந்துள்ள வியாபகப் பொருளாவார். உயிரும், உலகும் இறைவனது வியாபகத்தில் ஒன்றாகக் கலந்திருக்கும் வியாப்பியமாகும்.  இவ்வாறு இரண்டு  பொருள் பிரிபின்றிக் கலந்திருக்கும் நிலைக்குஅத்துவித சம்பந்தம்எனப்படும். உலகப் பொருளைக் காட்டிலும் உயிர் இறையோடு கலந்திருக்கும் சம்பந்தமே சைவ சித்தாந்தத்தில் சிறப்பாகப் பேசப்படுகிறது. ஏனேனில் உயிரே சிவத்தை உணர்ந்து அனுபவிப்பதற்குரிய சிறப்புடையதாகும்.

      மெய்கண்டார் சிவம், சத்தி, ஆன்மா, ஆணவம், சுத்தமாயை ,அசுத்தமாயை என்னும் ஆறு பொருளை அநாதி என்று குறிப்பிடுகிறார். இதில் சிவம், சத்தி குணம் மற்றும் குணிப்பொருளாகும். ஆன்மா வியாப்பியப் பொருளாகும். ஆணவம் வியாப்தி எனப்படும். மாயை கன்மம் சிவத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கும். எனவே இவையும் வியாப்பியமாகும். வியாபகப் பொருள் வியாப்பியப் பொருளில்  கலந்திருக்கும். வியாப்பியப் பொருள் வியாப்பகப் பொருளைத் தனக்கு ஆதாரமாகக் கொண்டிருக்கும். வியாபகப் பொருள் ஒன்றாய்த் தான் இருக்கும். வியாப்பியப் பொருள் பலவாக இருக்கலாம்.

      சிவபெருமான் பெத்த (கட்டுநிலை), சுத்த (முத்திநிலை) என்னும் இருநிலைகளில் உயிருடன் கலந்திருக்கிறான். இவ்விரு நிலைகளில் பெத்த நிலையில் உயிர் முனைத்துத் தெரிகிறது. சுத்த நிலையில் சிவம் முனைத்துத் தெரிவதாய் அமைகிறது. ஆதலால் இறை உயிர் இணைந்திருந்தாலும் ஒன்;று மட்டுமே தோன்றுதல் என்னும் நிலை பெத்தம், சுத்தம் என்ற இருநிலையில் அமையும் என்பது சைவசித்தாந்த கருத்தாகும். ஆனால் சங்கரர் பெத்த நிலையில் பிரம்மப் பொருள் (இறை) பல என்றும், முத்தி நிலையில் ஒன்று எனவும் கூறுகிறார். ஆதலால் இவர்தம் கருத்துப் பொருந்தாததாக அமைகிறது.

மெய்கண்டாரின் அத்துவிதக் கொள்கை

     மெய்கண்டாரின் அத்துவிதக் கொள்கை, தான் அருளிய சிவஞான போத இரண்டாஞ் சூத்திரத்தில் பெத்த நிலையையும், பதினோராஞ் சூத்திரத்தில் சுத்த நிலையையும் விளக்கயுள்ளார். இறைவன் உயிரது நன்மைக்காக ஐந்தொழில் ஆற்றும் இடத்தை அவையே தானேயாய் என்னும் சூத்திரத்தின் வழி விளக்குகிறார். அவற்றை 1.அவையேயாதல் -ஒன்றாய்நிற்றல்- அபேதசம்பந்தம் எனவும், 2.தானேயாதல் -வேறாய்நிற்றல்- பேதசம்பந்தம் எனவும், 3.அவையே தானேயாதல் - உடனாய்நிற்றல்- பேதாபேதசம்பந்தம் எனவும் மூன்றாகப் பிரித்துக் காட்டுகிறார். மேலும் ஒன்றாதற்குஉடம்பும் உயிரும் போல்என்றும், உடனாதற்குகண்ணொளியும் ஆன்மபோதமும் போல்என்றும், வேறாதற்குகண்ணும் சூரியஒளியும் போல்என்றும் உவமைக் காட்டி நிறுவியுள்ளார். மெய்கண்டாரேஇவ்வான்மாக்கள் பலவும் முதல்வன் தானேயாக நிற்கும்என்று பொருள் உணர்த்திக் காட்டியிருக்கிறார். (சிவஞானமாபாடியம் சூத்.2,அதி.1,மேற்கோள்)

     அத்துவிதம் என்னும் சொல் இம்மூன்று நிலைக்கும் பொதுவாய் நிற்பது என்பது மெய்கண்டார் தரும் விளக்கமாக அமைந்துள்ளது. அத்துவிதம் என்ற சொல்அந்நியமின்மைஎன்னும் பொருளை உணர்த்தும் என்பது மெய்கண்டார் கண்ட பொருள் என்பர் சைவ நூலாசிரியர். அத்துவிதம் என்பதற்கு அந்நியமின்மை, வேறின்மை, பிரிப்பின்மை, ஒட்டியிருத்தல், உடந்தையாயிருத்தல் என்பன தமிழில்  கூறும் சொற்களாக அமைந்துள்ளன. இச்சொற்களின் வழியாக அத்துவிதம் என்பதற்கு இரண்டு பொருள் இணைந்து ஒன்றாய், ஒன்று என்பதற்கும் இரண்டு என்பதற்கும் பொதுவாய் நிற்பது என்பதே பொருள். இதனை இரண்டு பொருள்கள்  இரண்டு தன்மையற்று நிற்றல் என்பர். ஆதலால் சங்கரர், இராமானுசர், மத்துவர் அத்துவிதத்தை ஏகம் என்னும் இன்மைப் பொருளில் கூறுதலும், உலகு, உயிர் பொய்த் தோற்றம் எனக் கூறுதல் பொருந்தாது என நிறுவியுள்ளார்.

      இறைக்கும் உயிர்க்கும் உள்ளத் தொடர்பைச் சங்கராத் வைதம்(சங்கரர்) அபேதவாதத்தின்(ஒன்றாதல்) வழி விளக்கிக் கூறுகிறது. இறையே உயிர் என்றும்,  பொன்னும் பொன்னாலான அணிகளன்களைச் சான்றாகக் கூறுகிறது. துவைதம்(மத்துவர்) பேதாவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இறையும் உயிரும், ஒளி இருள் போல் வேறுப்பட்டவை எனக் காட்டுவர். விசிஷ்ட்டாத் வைதம்(இராமானுசர்) பேதாபேதவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.  இறை, உயிர் சொற்பொருள் போல் ஒன்றுப்பட்டும் வேறுப்பட்டும் இருக்கும் என்பர். இவ்வாறு பிற சமயம் வெவ்வேறு கருத்துகளை வழங்கியிருக்க, மெய்கண்டார் இறை உயிரின் தொடர்பை தகுந்த உவமைகளின் வழி விளக்கியுள்ளார். அவற்றுள் இறை உயிரோடும், உலகப் பொருளோடும் தொடர்பு கொண்டுள்ள ஒன்றாதற் தன்மைக்குஉடம்பும் உயிரும் போலஎன்றும், வேறாதற்குஅகர உயிர் போல்என்றும், ‘கண்ணும் சூரியஒளியும் போல்என்றும், உடனாதற்குகண்ணொளியும் ஆன்மபோதமும் போல்என்றும் உவமைக் காட்டியுள்ளார். சிவஞானபோதம் பதினோராஞ் சூத்திரத்தில்காணும் கண்ணுக்கு காட்டும் உளம் போல காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்என்னும் அடிகளைக் கொண்டு விளக்கம் தருகிறார். மெய்கண்டார் கூறிய உவமைகளை அவர் பின் வந்த உமாபதிசிவமும், “…உடல்உயிர் கண்அருக்கன் அறிவொளி போல் பிறிவு வரும் அத்துவிதம்” (சிவப்பிரகாசம்.7) என்று சிவப்பிரகாச நூல் வழி விளக்கியுள்ளார்.

     அத்துவிதம் என்பதற்கு மெய்கண்டார் இவ்வாறு பொருள் கூறாவிட்டால் மகாவாக்கியம் பயனற்றதாகிவிடும் என்பது மாதவஞ் சிவஞான முனிவர் கூறிய கருத்தாக அமைந்துள்ளது. இக்கருத்துஅதுநீ ஆகின்றாய் எனவும் ஆது ஆனேன் எனவும், பொருள்படும் தத்துவமசி முதலிய மகாவாக்கியங்களின் பொருளே ஈண்டு ஓதினார் ஆகலின் ….” (சூ.2,அதி.1, மேற்கோள் வாக்கியத்தின் பாடியம்) என்று மாபாடியத்தின் வழியாக அறியஇயலுகிறது. மெய்கண்டார் காட்டும் அத்துவிதமே சுத்தஅத்வைதம் எனப்படும் என்பதை மாதவஞ் சிவஞான முனிவர், “சுத்தமாய் நின்றே பொருள் உணர்த்தலின் சுத்தாத்துவிதம் என வழங்கப்படும்”. (சூ.6,அதி.2, சிவசமவாத மறுப்பு) என்று மாபாடிய நூல் வழி உணர்த்தியுள்ளார். மெய்கண்டாரின் அத்துவிதப் பொருளை உணர்ந்திருந்த தாயுமானவர், “பொய்கண்டார் காணாப் புனிதம் எனும் அத்துவிதம்மெய்கண்டநாதன் அருள்மேவும் நாள் எந்நாளோ?” (தாயுமானவர் - எந்நாட்கண்ணி - குருமரபின் வணக்கம்-4) எனப் போற்றியுள்ளார்.